Breaking News

கால அவகாசம் வழங்குவதற்கு உடன்படமுடியாது விக்கி(காணொளி)

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமை
பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோரும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அவ்வாறு வழங்கப்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் மறந்துவிடும் என்றும், ஆகையினால் தமக்கு இதில் உடன்பாடு இல்லையென்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதாக இருந்தால், ஐ.நாவின் நேரடி கண்காணிப்பிலேயே வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்த நிலையில், இது குறித்து யாழில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.



கால அவகாசத்தினை கொடுக்கும் போது இவ்வளவு காலமும் எடுத்த நடவடிக்கைகள் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதென ஆராய்ந்து பார்க்க வேண்டுமென குறிப்பிட்ட வடக்கு முதல்வர், வாராந்தம் மற்றும் மாதாந்தம் என்ன செய்கின்றார்கள் என்பதனை ஐ.நா. அறியக்கூடியவாறு ஏதாவது ஒரு செயற்றிட்டத்தினை வகுக்குமாறு கூறமுடியுமென மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கால அவகாசம் வழங்குவதில் தமக்கு எவ்வித உடன்பாடு இல்லையென தெரிவித்த வடக்கு முதல்வர், குறுகிய காலமும் அதிகளவான மேற்பார்வையுமே முக்கியமானதென வலியுறுத்தியுள்ளார்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்