Breaking News

அரசியல் தலையீடுகளால் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி

அரசியல் தலையீடுகளால் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள போதிலும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தற்காலிகமாக அவரை சேவையில் நீடிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக  2017 பெப்ரவரி 26ஆம் நாள் நடத்தப்பட்ட தேர்தலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களான, பேராசிரியர் எஸ்.சிறீஸ்கந்தராஜா, பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன், பேராசிரியர் ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள், பல்கலைக்கழக பேரவையினால், மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

எனினும், வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் தமது விருப்புக்குரியவரைத் துணைவேந்தராக நியமிப்பதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக, புதிய துணைவேந்தர் நியமனம் இழுபறிக்குள்ளாகியிருப்பதால், தற்போதைய துணைவேந்தருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, துணைவேந்தர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பொஸ்டனிலுள்ள பேராசிரியரான சாம் தியாகலிங்கம் அனுப்பி வைத்த வேட்புமனு, முடிவு நாளுக்கு பின்னர் தாமதமாகவே பதிவாளருக்கு கிடைத்தது என்று பல்கலைக்கழக பேரவை அவரது வேட்புமனுவை நிராகரித்திருந்தது. இது முன்னதாக சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.