புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படுமா?
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்துக்கு அருகிலுள்ள காணிகளில் இரண்டாம் கட்டமாக 3 மாதத்தில் விடுவிக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட காணிகள் யூன் மாதம் 4 ஆம் திகதி விடுவிக்கப்படுமா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி புலவுக்குடியிருப்பில் மக்கள் நிலமீட்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அதனை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த காணி உள்ளடங்கலாக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்
போராட்டம் ஒரு மாதத்தை அண்மித்த சந்தர்ப்பத்தில், இராணுவத்தால் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக காணி விடுவிப்பு தொடர்பில் ஒரு கடிதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் 7.75 ஏக்கர் காணி முதல் கட்டமாக விடுவிக்கப்படும் எனவும் மிகுதி 10 ஏக்கர் காணி இரண்டாம் கட்டமாக 3 மாதத்தில் விடுவிக்கப்படும் எனவும் மிகுதி காணி பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி 6 மாதங்களில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை மக்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி முதல் கட்ட காணிகள் விடுவிக்கப்பட்டன.
தற்ப்போது யூன் மாதம் 4 ஆம் திகதி 3 மாதகால அவகாசம் முடிவடையும் நிலையில் தமது காணி விடுவிக்கப்படுமா? என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்