Breaking News

ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்



கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம், வரும் செப்ரெம்பர் 6ஆம் நாளுக்கும் ஒக்ரோபர் 1ஆம் நாளுக்கும் இடையில் முடிவடைகிறது.

மாகாணசபைகள் சட்டத்தின் கீழ், சபைகளின் ஆயுள்காலம் காலாவதியாகி ஒருவாரத்துக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். சட்டத்தின்படி, மாகாணசபைத் தேர்தல்களை பிற்போட முடியாது.

அவ்வாறு பிற்போடுவதானால், நாடாளுமன்றத்தில் சமூகமளிக்காத உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் அதற்கான பிரேரணை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மாகாணசபைகளைக் கலைப்பதன் மூலம், தேர்தலுக்கு இன்றும் கூட அழைப்பு விடுக்கப்படலாம். எல்லா மாகாணசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்ற கருத்து உள்ள நிலையில், மாகாணசபைகளை முன்கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை நடத்தலாம்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் தான், உள்ளூராட்சித் தேர்தலை நடத்தலாம்.

இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஆதரவளிப்பதாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்தில் உறுதியளித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், தேர்தலை நடத்துவதற்கு 75 நாட்கள் காலஅவகாசம் தேவை. 55 நாட்கள் தேவை என்பது தவறு. அது மாகாணசபை தேர்தலுக்கான கால அவகாசமாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.