Breaking News

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்! – பழனிச்சாமி



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அந்தப் பணிகள் தொடங்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

குழு அமைத்து சிறந்த வரைபடம் தேர்வு செய்யப்பட்டு இந்த நினைவு மண்டபம் கட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.