தமிழ் தேசிய கட்சிகளை ஒன்று சேருமாறு ரெலோ அழைப்பு.!
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அக் கட்சியின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அவசரமானதும் அவசியமானதுமான சில விடயங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு சில சக்திகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக தேர்தல் முடிவுகளை ஆழமாக ஆராய்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பலம் அசையாமல் இருப்பதை எவரும் உணரமுடியும். அதேநேரத்தில் சில எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை நாங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளோம்.
ஆயினும் தமிழ் இனத்தின் பிரதான தேசிய சக்தியாக,பிரதிநிதித்துவ சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தன்னை இந்தத் தேர்தலின் மூலம் நிலை நிறுத்தியிருக்கின்றது என்பதும் தெட்டத்தெளிவாகும்.
யாழ்.மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்ற வாக்குகளை ஆராய்ந்து பார்த்தாலும் சரி அல்லது தீவகத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர யாழ். மாவட்டத்தில் ஏனைய கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளை ஆராய்ந்து பார்த்தாலும் சரி நாங்கள் மற்றக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை தெட்டத்தெளிவாக காணக்கூடியதாகவுள்ளது.
தற்போது இதைப்பற்றி அதிகமாக பேச வேண்டிய தேவையில்லை.எங்கள் முன் உள்ள கேள்வி என்பது புதிய தேர்தல் முறையின் கீழ் ஸ்திரமான நிர்வாகத்தை நாங்கள் எப்படி நடத்தப்போகிறோம். இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தமிழ்க் கட்சிகள் யதார்த்தத்தை உணர்ந்து சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்திரமான நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். அதே ஒத்துழைப்பை தேவைப்படும் மன்றங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கத் தயாராக இருக்கும்.
இப் பின்னணியில் அனைவரும் பொறுப்புணர்வுடன் சிந்தித்தால் எமது மக்களுக்கு அவர்கள் வாழுகின்ற பிரதேசங்கள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்திரமான நிர்வாகத்தை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இதேவேளை எமது மக்களுடைய தேசிய பிரச்சினைக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைக்கும் நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வு ஒன்றினை நோக்கிய எங்களின் பயணம் எந்தவிதத்திலும் தடைப்பட்டு விடாமல் தொட ர்ந்தும் உறுதியோடும் உத்வேகத்தோடும் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவாக தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் புரிந்துணர்வுடன் பொது கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி என்ற அடிப்படையில் இந்த அழைப்பினை நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் விடுக்கின்றோம்.
ஏற்கனவே இத்தகைய வேண்டுகோள் தேர்தல் முடிந்த கையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிவார்கள்.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலே வேறுபாடுகள் கிடையாது. இலங்கை என்ற ஒரே நாட்டுக்குள்ளே நீதியான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதாக இருந்தால் எமது மக்கள் வாழுகின்ற எமது தாயகத்திற்கு பூரண சுயாட்சி வேண்டும் என்கின்ற கோரிக்கை தொடர்பில் தமிழ்க் கட்சிகள் மத்தியிலே அடிப்படையிலே வேறுபாடுகள் கிடையாது.
இந்த சுயாட்சி, சமஷ்டி ஆட்சியின் அடிப்படையில் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதில் வேறுபாடு கிடையாது.
ஆகவே தான் நாங்கள் ஏனைய தமிழ்க் கட்சிகளை வேண்டிக்கொள்வது எல்லாம் நாங்கள் விரைவாக ஒரு பொது கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கு ஏதுவாக ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்பது தான்.
கடந்த காலங்களில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் கூட தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயலாற்றிய பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தமையை நினைவுபடுத்துகின்றேன்.
எத்தனை முரண்பாடுகள்,மோதல்கள் இருந்தபோதும் கூட எமது மக்களின் நலனுக்காக அரசியல் ரீதியிலே நாங்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்திருக்கின்றோம்.
இது 1990 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் எங்களுடைய வேண்டுகோள் தமிழ் மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கின்ற அந்தக் கடமையின் அடிப்படையிலே நாங்கள் விரைவாக ஒரு பொது வேலை த்திட்டத்தில் ஒரு பொது கொள்கைத் திட்டத்தை வகுத்து அந்த அடிப்படையில் தென்னிலங்கைக்கும் இலங்கை அரசுக்கும் அரசியல்தீர்வு விடயத்திலே ஒன்றாக அழுத்தம் கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்பதுதான்.
தென்னிலங்கையில் ஸ்திரமற்ற அரசியல் நடக்கின்றது எது? எப்போது? நடைபெறும் என்று ஆருடம் கூறமுடியாது. அது எப்படிப்போனாலும் கூட ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.
அதே நேரத்தில் இந்த அரசியல் தீர்வு முயற்சிகள் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டிலே நீதியான அரசியல் தீர்வுக்கு வழிசமைக்குமா என்பது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு பாரிய சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகம் இப்போதும் இருக்கிறது.
இருந்தாலும் கூட இந்த பொறிமுறைக்கு ஊடாக செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது என்ற காரணத்தினால் ஒரே நாட்டுக்குள்ளே அரசியல் தீர்வுக்கு தயாராக இருக்கின்றோம் என்று நாங்கள் கூறிக்கொண்டிருக்கும் பின்னணி யில் இந்த அரசியல் தீர்வு முயற்சியினை நாங்கள் ஒருபோதும் புறந்தள்ள முடியாது என்கின்ற அரசியல் யதார்த்தத்தின் காரணமாகவும் இந்த முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடவேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கின்றது.
ஆகவே இந்த முயற்சிகளை கூட்டாக எதிர்கொள்வது அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் தமிழ் இனத்தின் குரல் ஒன்றாக ஒலிப்பதற்கு ஏதுவாக தமிழ் தேசி யக் கட்சிகள் அனைத்தும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் செயற்படுவதையிட்டு உடனடியாக சிந்திக்க வேண்டும், செயற்பட முன்வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எமது மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எங்களுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நாங்கள் ஒரே குரலில் பேசவேண்டும். ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்படி நாங்கள் செயற்பட்டால் மாத்திரமே நாங்கள் எதிர்பார்க்கி ன்ற அரசியல் தீர்வு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை உரிய நேர த்தில் எடுத்தவர்களாக கருதலாம்.
ஒருவேளை இந்த அரசியல் தீர்வு முயற்சிகள் பலரும் கூறியது போல் முறிக்கப்படுமாகவிருந்தால் அல்லது சிதையுமாக இருந்தால் நாங்கள் தொடர்ந்து காலத்தை வீணடித்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்தது எவ்விதம் நாங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி எமது மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப் போகிறோம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.
இத்தகைய பிரச்சினை எழும் போது சிந்தித்து செயற்பட முடியும். இப்போது எங்களுக்குள்ள பிரதான கேள்வி தேர்தல் முடிந்து விட்டன.தேர்தல்கள் வரும், போகும். இது உள்ளூராட்சி மன்றத் தேர்தல். இத் தேர்தல் முடிவுகளை எவரும் தங்களுக்கு ஏற்றபடி அல்லது விரும்புகிறபடி வியாக்கியானம் செய்ய முடி யும்.
அது சம்பந்தப்பட் அந்தத் தரப்புகளின் விருப்பம்.அதிலே யாரும் தலையிடமுடியாது.
ஆனால் நாங்கள் பிரிந்து நின்ற காரணத்தினால் பேரினவாதக் கட்சிகள் தமிழ்த் தேசத்தின் அரசியல் பரப்பில் ஊடுருவி இருக்கின்றன. அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி கவர்ந்திழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஸ்திரமான நிர்வாகத்தை நிறுவுவதில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எதுவும் பேரினவாதக் கட்சிகளின் ஆதரவில் தங்கி நிற்பது அல்லது ஆதரவை கோருவது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகும். இது ஒது பாரதூரமான விவகாரம் ஆகும்.
ஆனால் யதார்த்தம் வேறாகவுள்ளது. ஸ்திரமான நிர்வாகம் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவை. அது மக்களின் எதிர்பார்ப்பு.அதனைக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் கடமை. ஆகவே நாங்கள் பொறுப்புணர்வை கைவிட்டு குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இரண்டு ஒரு சபைகளை கைப்பற்றுவதற்காக தொலைதூர நோக்கம் இன்றி செயற்படுவோமாக இருந்தால் பேரினவாதக் கட்சிகள் தங்களின் அரசியல் இருப்பை இங்கே தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது.
ஆகவேதான் நாங்கள் ஒன்றுபட்டு சிந்தித்து செயற்படுமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக வட,கிழக்கை தளமாக கொண்டு இயங்கிக் கொண்டி ருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இதன் அர்த்தம் அனைவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து சேருங்கள் என்பதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் எந்நேரமும் திறந்தவண்ணமுள்ளன. எந்தக் கட்சிகளும் இணையலாம். அதை நாங்கள் தேர்தலின்போதே தெரிவித்துள்ளோம்.
அதற்கு முன்னரும் கூறியுள்ளோம். தற்போதும் கூறுகின்றோம்.
ஆனால் அத ற்கு அப்பால் ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு பொது நிலைப்பாட்டின் அடிப்படையில் எமது மக்களுக்கான அரசியல் நீதியை வென்றெடுப்பதற்கு ஏதுவாக ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்து மக்களுக்கு விசுவாசமாக செயற்பட வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு.
இவ் வேண்டுகோளுக்கு சாதகமான பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் அரசியல் தலைவ ரும் வடமாகாண உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், குகதாஸ் ஆகியோ ரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.