Breaking News

ஈபிடிபி + கூட்டமைப்பு கூட்டு கொள்கையை கைவிட்டதாகவே அமையும் –விக்கி

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டால், அது பதவிகளுக்காக – சுயநலங்களுக்காக கொள்கைகளைக் கைவிட்டதாகவே கருதப்படும்”

இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம்  முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகர சபையை ஈ.பி.டி.பியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஆட்சியமைத்துள்ளதைமை தொடர்பில் தங்களின் கருத்து என்ன? என்று செய்தியாளர் ஒருவர்
கேள்வி எழுப்பினார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.டி.பி தமக்கு
நேரடியாக ஆதரவு தரவில்லை என்று ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அதனையே நான் படித்தேன்.

சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, ஈ.பி.டி.பியின் ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை. என்னவாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை அமைத்தால், கொள்கைகளை கைவிட்டு சுயநலங்கள்தான் எமக்கு முக்கியம் என்ற கருத்து ஏற்படும். என்னுடைய அவதானிப்பு அதுவாகவே உள்ளது” என்று
முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பதிலளித்தார்.







அரசியல்,சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டு இயக்கமாகத் தொழிற்பட்டுவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைப் பணிமனை யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.03.2018) திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

அரசடிவீதிகந்தர்மடத்தில் அமைந்துள்ள இந்தப் பணிமனையை வடக்குமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்குமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன்,ம.தியாகராஜா ஆகியோரும்பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.