Breaking News

கிளிநொச்சி போராட்டத்தில் தமிழரசின் ரௌடித்தனம்(காணொளி)

காணாமல் போனோருக்கு நீதி கோரி இன்று
நடத்தப்பட்ட போராட்டத்தில் பெரும் கரும் புள்ளியாக, தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நடந்து கொண்ட மோசமான சம்பவம் அமைந்துள்ளது.

போராட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டது மட்டுமல்ல, பிரதேசசபை உறுப்பினர் தாக்கப்பட்டது, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது என, கேவலமான ரௌடித்தனத்தில் இன்று கிளிநொச்சி தமிழரசுக்கட்சியின்  உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பேரணி ஆரம்பித்ததும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வரிசையில்- போராட்டத்தை தலைமை தாங்கி செல்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் அதன்பின்னால் செல்வதாகவே ஏற்பாடு.

ஆனால் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாமல்- ரௌடிகளை போல- முன்வரிசைக்கு வந்தனர். அவர்கள் பெரும்பாலும் கறுப்புச்சட்டை அணிந்திருந்தனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்காக முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பெற்று, ஒலிபெருக்கியை பொருத்தி, போராட்டம் குறித்து நேற்று கிளிநொச்சி முழுவதும் அறிவிப்பதற்கான ஏற்பாட்டை சமத்துவம் சமூக நீதிக்கான அமைப்பினர் செய்திருந்தனர். போராட்டம் ஆரம்பித்ததும், அந்த முச்சக்கரவண்டியை, காணாமல் போனோரின் உறவினர்களான பெண்களிடம் கையளித்தனர்- நீங்களே அறிவிப்பையும் செய்யுங்கள் என.

அந்த முச்சக்கரவண்டி தமது எதிர்தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை அறிந்திருந்த தமிழரசுக்கட்சியினர், கை ஒலிவாங்கிகளை தயாராக கொண்டு வந்திருந்தனர்.



ஏற்கனவே காணாமல் போனோரின் உறவினர்கள் அறிவித்தல் செய்ய, அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக, தமிழரசுக்கட்சியினர் அறிவித்தல் செய்தார்கள். காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம் என, காணாமல் போனோரின் உறவுகள் கோசமிட, அதற்கு போட்டியாக, காணாமல் போனோர் அலுவலகம் வேண்டுமென தமிழரசுக்கட்சியினர் கோசமிட்டனர்.

ஏற்பாட்டு குழு தலைவரான பாதிரியார் பலமுறை ஒலிவாங்கியை பெற்று, தமிழரசுக்கட்சியினரை பின்னால் செல்லுமாறும், காணாமல் போனோரின் உறவினர்களை முன்வரிசையில் விடுமாறும் கேட்டுக் கொண்டார். அதற்கு பலனில்லை.

இதற்குள் பேரணி டிப்போச்சந்திக்கு அண்மையாக சென்றபோது, கறுப்புச்சட்டை குழப்பக்காரர்கள் மக்களை வீதியை மறித்து உட்காரும்படி கட்டளையிட்டார்கள். பேரணி நகர்ந்து கொண்டிருக்கும்போது, இந்த திடீர் ஏற்பாட்டால் குழப்பம் ஏற்பட்டது.

பேரணிக்கு முன்பாக, அறிவிப்பில் ஈடுபட்டுக் கொண்டு சென்ற முச்சக்கர வண்டி, பேரணியாக மக்களை வருமாறும், யாரும் தடங்கல் ஏற்படுத்த வேண்டாமென்றும் அறிவிக்கப்பட்டது.

ரெலோ அமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன், ஒலிவாங்கியை பெற்று அறிவித்தல் விடுத்தார். பேஸ்புக்கில் பதிவிட வேண்டுமென்பதற்காக முன்வரிசைக்கு வந்து, போராட்டத்தை குழப்பாமல், காணாமல் போனோரின் உறவினர்களை முன்வரிசையில் விடும்படி கேட்டார்.

அவர் கேட்டது, தமிழரசுக்கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்த, நான்கைந்து பேர் முச்சக்கரவண்டியை சூழ்ந்து, அவரை கீழே இழுத்து தாக்கினார்கள். அதில் தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை தவிசாளர் ஒருவரும் உள்ளடக்கம். இன்றைய பேரணி முடியும் வரை, அடிக்கடி மதுசுதனுடன் அந்த தவிசாளர் உள்ளிட்ட கும்பல் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றதை அவதானிக்க முடிந்தது.




காணாமல் போனோரின் உறவினர்களான பெண்கள் அறிவிப்பில் ஈடுபட்டு வந்த முச்சக்கர வண்டியின் ஒலிபெருக்கி வயரை தமிழரசுக்கட்சி பிரதேசசபை உறுப்பினர் சத்தியானந்தன் அறுத்தெறிந்தார்.

பேரணியை குழப்பாமல் பின்னுக்கு செல்லுங்கள் என ஏற்பாட்டு குழு தலைவரான பாதிரியார் மன்றாட்டமாக தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் பலமுறை கேட்டும், அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். பிரதேசசபை உறுப்பினர்களான வட்டிக்கடை ஜீவன், குமாரசிங்கம், சத்தியானந்தன் ஆகிய பிரதேசசபை மக்கள் பிரதிநிதிகளும் அந்த குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலில் நின்றார்கள். அவர்களை விட, கறுப்பு பூனைகளான பல ஆதரவாளர்களும் நின்றார்கள்.


இவர்களை ''தனித் தனியே நோட் பண்ணி வை'' ஒருத்தரும் கிளிநொச்சியை தாண்ட மாட்டாங்கள்!

இவ்வாறு ஊடகவியலாளர்களை நோக்கியும் அச்சுறுத்தல் விடப்பட்டமை காணொளிகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களை படம்பிடித்த ஊடகவியலாளர்களுடனும் “அரசியல் ரௌடிகள்“ மல்லுக்கட்டினர். பல்வேறு இடங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அனைத்து ஊடகவியலாளர்களுடனும் மல்லுக்கட்டினர். முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவரை தாக்கினார்கள்.

மற்ற ஊடகவிலாளர்களை பார்த்து, “எமது செய்திகளை போட்டு, பிச்சையெடுத்து பிழைப்பவர்கள்தானே நீங்கள்“ என அநாகரிகமாக திட்டினார்கள். பேரணி முடிவடையும் வரை ஊடகவியாளர்களை திட்டிக் கொண்டே வந்தது அந்த கும்பல்.