Breaking News

வாடகையை கேட்டதால் வீட்டு உரிமையாளரை ஓட ஓட குத்திக் கொலை செய்த இளைஞன்!

சென்னையில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

சென்னை குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவர், தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில், அஜித் என்ற இளைஞர் வாடகைக்குக் குடியிருந்ததாகக் கூறப்படுகிறது.  

கொரோனா காரணமாக, அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில், அஜித் என்ற இளைஞர் வேலை இன்றி சாப்பாட்டிற்கே கடும் சிரமப்பட்டு வந்தார். இந்த விசயம் தெரிந்தும், வீட்டு உரிமையாளர் குணசேகர், அஜித் என்ற இளைஞரிடம் வாடகை கேட்டதாகத் தெரிகிறது. 

மேலும், தொடர்ந்து 4 மாதங்களாக வாடகை கேட்டு, வீட்டு உரிமையாளர் கடும் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்த இளைஞர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துள்ளார். அந்த நேரத்தில், வீட்டின் உரிமையாளர் மீண்டும் வாடகை கேட்டு தொந்தரவு செய்து உள்ளா். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அஜித், தன் வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவரை குத்த முயன்றுள்ளார். அப்போது, வீட்டு உரிமையாளர் அவரை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனால், இன்னும் ஆத்திரம் அடைந்த அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரனை ரோட்டில் ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனை அந்த பகுதியில் இருந்தவர்கள், பலரும் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

அப்போது, வீட்டு உரிமையாளர் குணசேகரின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், இளைஞர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதனிடையே, சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.