Breaking News

மின்சார கட்டணங்களுக்கு சலுகை வழங்க பரிந்துரை! அரசாங்கத்தின் முடிவு?

மின்சார கட்டண பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தின் பெறுமதி அதிகரித்துள்ளதன் காரணமாக பொது மக்களின் சுமை அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறு அதிகரித்துள்ள சுமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார கட்டண பட்டியல் குறித்து ஆராய அமைச்சரவையின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை அமைச்சரவையின் கவனத்திற்கு இன்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை தாண்டி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த குழு பரிந்துரைத்துள்ள விடயங்கள் அடங்கிய அறிக்கையை திறைசேரிக்கு அனுப்பி அவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் அந்த ஆலோசனைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் ஒருவர் ஏற்கனவே அதிக பணத்தை செலுத்தியிருந்தால், அதனை மீண்டும் திருப்பிச் செலுத்தவும் அல்லது அடுத்த பட்டியலில் அதனை குறைக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை செலுத்த சலுகை காலம் வழங்கப்படும் எனவும் எவரேனும் மின் கட்டணத்தை செலுத்த தவறியிருந்தால் அவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என அமைச்சர் தெரிவித்தார்.

இன்று (08) பெட்ரோலிய வள அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறினார்.