Breaking News

நாங்கள் இனவாதிகள் அல்லர், தேசப்பற்றாளர்கள் - மணிவண்ணன்(காணொளி)

சிங்கள மக்கள் வந்து இங்கு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இனவாதிகளாக நாங்கள் இல்லை. நாங்கள் இனப் பற்றாளர்கள். எங்களுடைய மண்ணை அபகரிப்பதனை தான் நாங்கள் வெறுக்கிறோம். அதற்கெதிராகத் தான் நாங்கள் போராடுகின்றோம். இங்கு எத்தனையோ ஆயிரம் பேர் நிலங்கள் இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் அரசின் அனுசரணையில் எங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதனைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

மணலாறு பகுதியில் தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். இதனைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். அப்படியான குடியேற்றத் திட்டங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அரசாங்கம் சிங்கள மக்களை துரத்திவிட்டு தமிழ்மக்களை கொழும்பில் குடியேற்றவில்லை. தமிழ் மக்களுக்கு நிலங்களைக் கொண்டு போய் சிங்கள பகுதிகளில் கொடுக்கவில்லை. கொழும்பில் இருக்கும் தமிழ் மக்கள் தங்கள் சொந்த உழைப்பில் பணத்தை செலுத்தி நிலங்களை வீடுகளை வாங்கி இருக்கின்றார்கள்.  

இங்கிருக்கின்ற மக்களுக்கு இங்கிருக்கின்ற நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதன் நோக்கம் முழு இலங்கையையும் பௌத்த சிங்கள மயப்படுத்துவது. தமிழர் தாயகம் என்று சொல்லி ஒன்றும் இருக்கக் கூடாது. எல்லா இடமும் சிங்கள மக்களை கொண்டு வந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கலந்து விட்டு அவர்கள் பின் ஊதிப் பெருப்பிப்பார்கள். அப்போது தமிழினம் காணாமல் போகும். எப்படி நீர்கொழும்பில் தமிழ் மக்கள் இல்லாமல் போனார்களோ அந்த நிலைமை இங்கும் வரும்.  

கிழக்கு மாகாணத்தின் 1900 ஆண்டு குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்களை எடுத்துப் பார்த்தால் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். இன்று அம்பாறையில் தமிழ் மக்கள் வீதம் 20 ஆக சுருங்கி விட்டது. தமிழ் மக்கள் கணிசமாக இருந்த திருகோணமலையில் இன்று 37 வீதம் தான் தமிழ் மக்கள். இந்நிலைமை முல்லைத்தீவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் வர நீண்டகாலமெடுக்காது. தமிழர் தாயகம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் செயற்படுகின்றார்கள்.  

சுமந்திரன் அவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றார். எங்களுக்கு எதிராக இனவழிப்பு நடக்கவில்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத, அரசியல் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லி இருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகால செயற்பாடுகள் புலிநீக்க அரசியலாக இருந்து இப்பொழுது தமிழ்த் தேசிய நீக்க அரசியலாக மாறி, நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் எல்லா இடமும் எல்லாருக்கும் சொந்தம், வடக்கு கிழக்கிலும் நாங்கள் இனி சிங்கள மொழி பேச வேணும். தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி என்ற ஒன்று இருந்தது தமிழர்களுக்கு என்று ஒரு பண்பாடு இருந்தது. என்கிற விடயங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற நிகழ்ச்சி நிரலுக்குள் செல்கின்றார்கள்.