Breaking News

IPL: தவான் அதிரடியால் சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

ஷார்ஜாவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் சாம் கரன் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் அடுத்துக் களமிறங்கிய ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளஸியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார். டூ பிளஸி 47 பந்துகளில் 58 ரன்களும், வாட்சன் 36 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அடுத்துக் களமிறங்கிய அம்பத்தி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களும் விளாசினர். இதனால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்கத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்வி ஷா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அஜிங்கிய ரஹானே 8 ரன்கள் மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். இதனால், டெல்லி அணி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது.

மறுமுனையில் ஷிகர் தவன் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த நிலையில், ஷ்ரேயஸ் ஐயரும் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 14 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஷிகர் தவன் 58 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி 101 ரன்கள் சேர்த்து அசத்தினார். கடைசி ஓவருக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அக்ஷர் படேல் மூன்று சிக்ஸர்கள் விளாசி டெல்லி அணியை வெற்றிபெறச் செய்தார்.