Breaking News

எலெக்‌ஷன் இன்னும் முடியல ராஜா: ட்ரம்ப் அடாவடி!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற 270 வாக்குகளை பெற வேண்டும். இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்காவின் 46ஆவது அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 

இன்னும் சில மாகாணங்களில் யார் வெற்றி என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே ஜோ பைடன் வெற்றிக் கோட்டை தாண்டிவிட்டார். எனவே அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மேலும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார்.   

இந்நிலையில், இந்த தேர்தல் இன்னும் முடியவில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோ பைடன் தன்னை வெற்றியாளர் என்று பொய்யாக காட்டிக்கொள்கிறார். இந்த தேர்தல் இன்னும் முடியவில்லை என்பதே உண்மை. ஜோ பைடன் வெற்றிபெற்றதாக எந்த மாகாணமும் சான்று அளிக்கவில்லை.  

பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை கண்காணிக்க நோக்காளர்கள் அனுமதிக்கப்படவில்லை. வாக்குகள்தான் யார் அதிபர் என்பதை முடிவு செய்ய வேண்டும். திங்கள் முதல் நாங்கள் நீதிமன்றத்தை நாடி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதையும், உண்மையான வெற்றியாளருக்கு பதவி கிடைப்பதையும் உறுதிசெய்வோம்.  

அமெரிக்க மக்கள் நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். உண்மையான வாக்குகள் மட்டுமே நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்கும். இந்த அடிப்படை கூட ஜோ பைடனுக்கு தெரியவில்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மட்டுமே வாக்கு எண்ணிக்கையை மறைமுகமாக மேற்கொள்வர். பைடன் எதை மறைக்கிறார்? அமெரிக்க மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் தகுதியான நேர்மையான வாக்கு எண்ணிக்கையை பெறும் வரை நான் ஓயமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.