Breaking News

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 400 பில்லியன் டொலர்கள் இழப்பு: புடின்

 


ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய ஒன்றியம் 400 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

வருடாந்திர செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய போதே புடின் இதனைத் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ‘முட்டாள்தனம் மற்றும் சிந்தனையற்றவை’ என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.

அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் கட்டுப்பாடுகள் விதித்தவர்களுக்கு இது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்.

27 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், ஐரோப்பாவில் உள்ள மக்களின் உண்மையான நலன்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கவில்லை.

எவ்வாறாயினும், பொருளாதாரத் தடைகளால் ரஷ்யப் பொருளாதாரம் கடுமையான சேதத்தை சந்தித்து வருவதாக புட்டினின் சொந்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மத்திய வங்கியின் ஆளுனர் எல்விரா நபியுலினா, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் சர்வதேச பதிலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.