பாகிஸ்தானில் பல்கலைக்கழக தேர்வில் அண்ணன்- தங்கை உறவை கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சை கேள்வி!
பாகிஸ்தானில் உள்ள காம்சாட் என்ற பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் இளங்கலை எலக்டரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் நடந்த தேர்வில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினா தாளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதில் அண்ணன்-தங்கை இருவர் கோடை விடுமுறைக்காக பிரான்ஸ் செல்கிறார்கள். அங்கு ஓர் இரவு அவர்கள் இருவரும் தனி அறையில் தங்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது இருவரும் நெருக்கமாக இருந்தால் சுவாரசியமாக இருக்கும் என கருதுகிறார்கள்.
இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும். இதுபற்றிய உங்கள் கருத்துக்களை 30 வரிகளுக்கு மிகாமல் எழுதுங்கள் என்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி தாளை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதனை பார்த்த பலரும் பல்கலைக்கழகத்தை சரமாரியாக திட்டி தீர்க்கிறார்கள்.
புனிதமான அண்ணன்- தங்கை உறவை பல்கலைக்கழகம் கொச்சை படுத்திவிட்டதாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். குடும்ப உறவு முறையை சீரழிக்கும் இதுபோன்ற செயல்களில் பல்கலைக்கழகம் எப்படி ஈடுபடலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் இதுபோன்ற கேள்விதாள் தயாரித்த பேராசிரியரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும், பல்கலைக்கழகத்தை உடனே மூட வேண்டும் எனவும் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தான் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வி பாகிஸ்தான் மட்டுமின்றி உலக நாடுகள் இடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.








