Breaking News

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு வவுனியாவில் உருவாக்கம்!!

 


இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்றையதினம் உருவாக்கப்பட்டது.

தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வினையாற்றுவதற்காக இரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணிகள் அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக அடையாளம் காண 7 பேர் கொண்ட கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

அத்துடன் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழ் அரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைகழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, ஜக்கியதேசிய கட்சி, ஶ்ரீ தமிழ் ஈழ விடுதலைஇயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.