Breaking News

இன்றைய வானிலை நிலைமை !

 


நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (31ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில் அடப்பன் குளம் (வவுனியா மாவட்டம்), துட்டுவெவ (அனுராதபுரம் மாவட்டம்) மற்றும் நிலாவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.