Breaking News

சிறப்பாக இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் இரதோற்சவம்!

 

 

கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் என்ற பெருமையினையும் இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் படைசூழ நடைபெற்றது. 

 கல்நந்தி புல்லுண்டு வெள்ளைனை உதைத்து சிலையாக்கிய அற்புத பெருமையினைக் கொண்ட கிழக்கில் தேரோடும் சிறப்பு மிக்க வரலாற்றுத்தலமாகிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர பெருவிழா கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. 



 தமிழ் மன்னர்கள் வகுத்த வழிமுறையின் கீழ் இன்றும் தான்தோறீச்சரம் உற்சவம் பழமைமாறா பண்பாட்டு விழுமியங்களுடன் நடைபெற்று வருகின்றது. நேற்று (03) பகல் கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்று வண்ணக்குமார்கள் பாரம்பரிய நடைமுறைகளுடன் பிள்ளையார் மற்றும் தான்தோன்றீஸ்வரர் தேரடிக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு தேர்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன. 

 இதன்போது பிள்ளையார் தேர் முதலாவதாக இழுத்துச் செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் இந்த தேர் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் தான்தோன்றீஸ்வரர் அமர்ந்துள்ள தேருக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு பக்கமாக நின்று வடமிழுத்தபோது தேர் வடங்கள் ஆறு தடவைகள் அறுந்த நிலையில் இறுதியாக விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் தேர் நகர்ந்து சென்றது.

 அதனை தொடர்ந்து இரண்டு தேர்களும் ஆலய முன்றிலுக்கு பக்தர்களினால் இழுத்து வரப்பட்டதை தொடர்ந்து தேர் உற்சவம் நிறைவுபெற்றது. தேர் உற்சவத்தினை தொடர்ந்து முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் தேரோட்ட உற்சவத்திருவேட்டை திருவிழா நேற்றையதினம் (03) இரவு சிறப்பாக நடைபெற்றது.