Breaking News

ஒரு வருட காலத்துக்குள் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

 


கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “  கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி  197 பேர் விலகிச் சென்றுள்ளனர். குறித்த 197 பேரிடம் பணம் வசூலிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை 5 வருட விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ள 526 பேரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். அதுமட்டுமல்லாது  இந்த வருடம் 71 வைத்தியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

எனினும் எவ்வாறான பிரச்சனைகள் இருந்தாலும் அரசாங்கச்  சுற்றறிக்கை மற்றும் நிறுவனக் குறியீடுகளின் பிரகாரம் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டிய கட்டாயம் எமக்குக்  காணப்படுகின்றது.

இதன் காரணமாக சுகாதார சேவையின் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக அவசர சேவை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களின் பற்றாக்குறை காணப்படுவதனால்  சில சிகிச்சை பிரிவுகளில் 24 மணி நேர சேவையை முன்னெடுப்பதில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.