Breaking News

கொழும்பில் 7 இடங்களுக்கு குண்டு தாக்குதல் எச்சரிக்கை!

 


கொழும்பின் நகரங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு நகரின் 7 இடங்களை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்றம், கொழும்பு துறைமுக நகரம், கங்காராமை உள்ளிட்ட 7 இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இந்த திட்டம், திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், இந்த விடயம் தொடர்பில் அறிந்திருந்த பின்னணியில், அது தொடர்பிலான தகவல்களை கடிதமொன்றின் ஊடாக தென்னேகும்புர பொலிஸ் சோதனைச் சாவடிக்கு வீசியுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது.

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள், தொலைபேசியின் ஊடாக கொழும்பு நகரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து கலந்துரையாடல்களை நடாத்தி விடயத்தை, குறித்த கைதி செவிமடுத்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்த தீவிரவாதிகள், குறித்த கைதியின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதி பல்லேகல சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் சந்தர்ப்பத்தில், குறித்த விடயங்கள் அடங்கிய கடிதத்தை அந்த கைதி, தென்னேகும்புர பொலிஸ் சோதனை சாவடிக்கு வீசியுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு, குறித்த கைதியிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த நீதவான், இந்த கோரிக்கையுடன் தொடர்புப்படும் நீதிமன்றத்தில் குறித்த கோரிக்கையை விடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும், இந்த விடயம் தொடர்பில் அச்சப்பட தேவையில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.