Breaking News

ஹர்த்தால் போராட்டம் ஆரம்பம் - முடங்கியது யாழ்ப்பாணம் !

 


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்றையதினம்   (20) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக யாழ்ப்பாண நகர் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்பை மாற்றியெழுதுமாறு அழுத்தம் வழங்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்தும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், கிழக்கில் தமிழர்களின் வாழ்விடங்கள், பொருளாதார வளங்கள், மேய்ச்சல் தரைகள் சிங்களக் குழுக்களால் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஹர்த்தாலுக்கு வடமாகாண தனியார் ஊழியர்கள், சந்தை வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்துத் துறையினர் எனப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நிலையில் யாழ் மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்த நிலையில் வெறிச்சேடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன.

அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.

முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது.

சேவைச் சந்தையும் முழுமையாக முடங்கியது.