Breaking News

சினிமா எடுக்கும்போது பயங்கர சுயநலவாதி நான்- பா.இரஞ்சித் !

 


இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

'தங்கலான்' டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது, விக்ரம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கலை நயமான நடிகர். பொதுவாக கதாபாத்திரங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று வரைந்து கொடுப்போம். அப்படி செய்து சில புகைப்படக்களை மட்டும் தான் விக்ரமிடம் எடுத்து கொடுத்தேன். ஸ்பாட்டில் அவர் அந்த மாதிரியான ஆளாக மாறி வந்துவிட்டார்.

ஒவ்வொரு படத்திற்கும் ஏன் இவ்வளவு மெனக்கெடுறீங்கன்னு நான் விக்ரமிடம் கேட்டேன். ஏன்னா விக்ரமிற்கு படப்பிடிப்பின் போது விலா எழும்பில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு ஒரு சண்டை காட்சி செய்து தர வேண்டும். நான் சினிமா எடுக்கும் போது பயங்கர சுயநலவாதி, ஆனால் சினிமா எடுக்கும்போது ரொம்ப கூலாக காட்டிக் கொள்வேன். யாரையும் கஷ்டப்படுத்தாம வேலை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். ஒருநாள் காலையில் ஆரம்பித்து நான்கு மணிவரை நடித்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

ஒரு கதாபாத்திரத்தை உண்மையாக காட்டுவதற்கு ஒரு நடிகர் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்தை அந்த நடிகர் எவ்வளவு நம்பி இருப்பார். அந்த நம்பிக்கை எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதனால் தான் தங்கலான் முழுமையடைந்துள்ளது. அவரிடம் இருந்த கமிட்மெண்டை பார்த்துவிட்டு எனக்கு பயம் வந்துவிட்டது. அதுதான் இன்னும் இந்த படத்தில் நல்ல வேலை செய்ய உதவியது என்று பேசினார்.