Breaking News

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த ஊடகவியலாளர்கள்!

 


படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று (02) போராட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஊடகஅமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள்,

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத்தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம். அதற்கான நீதிமறுக்கப்பட்ட நிலையில் இன்றும் நீதி கோரி போராடி வருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.

இதேவேளை மாற்றுக்கருத்துக்களை ஒடுக்கும் இவ் அரசாங்கம், ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றார்கள். எனவே ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத்தரப்பிற்கு தெரிவித்துக்கொள்கின்றோம். என்றனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஊடக சுதந்திரத்தை. உறுதிசெய், பொய்வழக்கு போடாதே, ஊடகப்படுகொலைக்கு நீதிவேண்டும், கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம் என்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்பாட்டம் வவுனியா பழையபேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் வரை சென்றதுடன் மீண்டும் பழையபேருந்துநிலையத்தை அடைந்து முற்றுப் பெற்றது.