Breaking News

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் இரண்டு புதிய சட்டங்கள் அவசியம் - ஜனாதிபதி !

 டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக புதிய சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரமாக இலங்கையின் பொருளாதாரத்தை மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.