Breaking News

பிறக்கும் 'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள்!

உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை முதலாம் நாள் விளங்குகிறது. இது தமிழ் புத்தாண்டு என்றும், சித்திரை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானது. 'சித்திரையே வா, மக்கள் வாழ்வில் முத்திரை பதிக்க' என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, இந்த மாதம் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் மாதமாக உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை மாதத்திற்கு இல்லை என்று சிலர் கூறினாலும், அது உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சித்திரை ஒன்றை, தமிழர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

சித்திரை ஒன்றின் சிறப்பு

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள்தான் சித்திரை 1. சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனிற்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.

'குரோதி' வருடப்பிறப்பு 

சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது நாளை மறுதினம் 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது.

விஷு புண்ணியகாலம் 

13.04.2024 சனிக்கிழமை 

பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை. 

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள் 

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள், சித்திரை, விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் ‍தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். 

குரோதி வருட பலன்கள்

இவ்வருடம் முன்மழை அதிகமாகும். பின்மழை மத்திமமாகும். உணவுப் பொருள் விருத்திகள், கமத்தொழில், கைத்தொழில் போன்றவற்றில் லாபங்கள் அமையும்.

அரச சேவை திருப்திகரமானதாக அமையும். கல்வி மேன்மைகள் சிறப்படையும். பொருட்களின் விலை அதிகமாக அமையும். அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். 

கைவிஷேட நேரங்கள் 

14.04.2024 சித்திரை 1ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 

காலை 07.57 மணி முதல் 09.56 மணி வரை.  

காலை 09.59 மணி முதல் நண்பகல் 12.01 மணி வரை. 

மாலை 06.17 மணி முதல் இரவு 08.17 மணி வரை. 

புது வியாபாரம் ஆரம்பிக்கும் நேரங்கள் 

15.04.2024 திங்கட்கிழமை 

காலை 09.08 மணி முதல் 09.51 மணி வரை. 

காலை 09.55 மணி முதல் 10.30 மணி வரை.