Breaking News

எண் 8இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சனி (saturn)

மனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள்.
“சுவையாக இருக்கிறது” என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு,
அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில் அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும். ஆனால் சாப்பிட்ட பின்பு மிகவும் இனிக்கும். மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும் சிறந்தது! இருப்பினும் நெல்லிக்கனியைச் சாப்பிடும்போது கசப்பு என்ற காரணத்திற்காகப் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை! அது மட்டுமன்று மனிதன் மற்ற எல்லாவற்றையும்விடத் தன் நாக்கிற்கே அடிமையாக இருக்கிறான்! நினைத்துப் பாருங்கள்! தொண்டைக்குக் கீழ் எந்த உணவுப் பொருள்கள், பானங்கள் சென்றாலும் ஒன்றுதான். 

நாக்கிற்கு கீழே சென்றுவிட்டால், எந்தப் பொருளுக்கும் எந்தச் சுவையும் இல்லை! இருப்பினும் மக்கள் தங்களின் உடல்நலம் பாராது நாக்கின் சுவைக்காகவே ருசியாகச் செய்து சாப்பிடுகிறார்கள். மக்களின் இரசனைதான் என்னே? அதைப் போன்றே மற்ற 8 எண்களும், மனிதனை தூண்டிவிட்டு அவனை வாழ்க்கையில் சுகங்களில் ஆழ்த்தி விடுகிறது! மனிதனும் தனக்கு யோகம் வந்துவிட்டது என்று மகிழ்கிறான்! ஆனால் சனிபகவான் ஒருவர்தன் மற்ற கிரகங்களின் தன்மையைக் கவர்ந்து ஒருவன் மற்ற ஜென்மம் வரை தொடர்ந்து செய்த வினைகளை ஆராய்ந்து, அவனது செயல்களுக்கு ஏற்ப முதலில் தீய பலன்களையும், பின்பு நல்ல பலன்களையும் தவறாமல் கொடுத்துவிடுகிறார்!

மற்ற நவக்கிரகங்களைப் போல், சனீசுவரரை ப்ரீதி செய்து, எளிதில் இவரது தண்டனையிலிருந்து தப்ப முடியாது! 8ஆம் எண்ணில் பிறக்கும்போதே, மனிதன் விதியில் வசப்படுகிறான், 8ம் எண் பிறவி எண்ணாக வரும் போது. வாழ்க்கையில் கடும் போராட்டத்தையும், உடலில் அல்லது மனத்தில் ஏதாவது சிறிய நோயையும் கொடுத்து விடுகிறது. ஆனால் விதி எண்ணாக வரும்போது, அவனது முயற்சிகளையும், ஊக்கத்தையும் தனது காலத்தில் (30 வயதுக்கு மேல்) கொடுத்து அவனைத் தடுமாற வைத்து விடுகிறது! அவனது சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் அனைவரிடமும் கெட்ட பெயர் அல்லது அவமானம் அடைய நேரிடுகிறது! 

பின்பு அவனை தன்வழியே போராடும் குணத்தை 8 எண் வாரி வழங்குகிறது! புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய ஊர் என்று ஒரு புதிய அற்புத வழியைத் திறந்து விடுகிறது! எனவே மக்களும், தங்களது கடுமையான உழைப்பால் வாழ்க்கையின் உச்சியை 45 வயதுக்கு மேல் எப்படியும் அடைந்து விடுகிறார்கள். இதுவே அனுபவ உண்மை ஆகும். பள்ளியில் தனது போதனையாலும் தேவைப்பட்டால் தண்டனையாலும் ஒரு மாணவனைச் சீர்திருத்தும் ஆசிரியர் போன்றவரே சனீசுவரராவார். எனவே 8ம் எண் விரும்பத் தக்கதேயன்றி வெறுக்கத்தக்கதன்று! 

சில அன்பர்கள் கோடீசுவரர்கள் குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். இவர்கள் என்னதான் வசதி மிகுந்த நிலையில் வாழ்ந்திடினும், வண்டுகள் துளைத்த மாங்கனியைப் போல் உள்ளக் குடைச்சல்கள் நிறைந்தவர்கள்! மனத்தில் ஏதாவது ஒரு சோகத்தையும், வியாதியையும் வைத்துக் கொண்டு, மனதில் நிம்மதியில்லையே என்று அலைவார்கள். “பாசமாவது ஒன்றாவது. அது வீதியில்தான் கிடைக்கிறது” என்று புலம்புவார்கள். ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதை அரித்துக்கொண்டே இருக்கும். குழந்தையில்லை, மனைவியால் இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவது நினைத்துத் தங்களை வருத்திக் கொள்வார்கள். 

வாழ்க்கையினை வெறுத்து முதியோர் இல்லம், ஆன்மீக மடங்கள், அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவரும், அதனை ஆரம்பிப்பவரும் 8ஆம் எண்காரர்களேயாகும். “எட்டாவது பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர்” என்பது பழமொழி. மக்களும் 8, 17, 26 ஆகிய தேதிகளைக் கண்டுதான் பயப்படுகிறார்கள். எந்த ஒரு நற்காரியத்தையும் தவிர்த்து விடுகிறார்கள். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், 8ம் எண்ணை விதி எண்ணாக உடையவர்களும் 9ம் எண்ணில் தங்களது பெயரை உடையவர்களும், தங்களது வாழ்வில் பல தோல்விகளையும், வேதனைகளையும், சில அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதே 8எண் கூறும் வாழ்க்கை நியதி! 

8ஆம் எண்ணில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள் (சனி வலிமை நல்ல நிலையிலிருந்தாலும்) பெருத்த தனவான்களாகவும், பல்வேறு தொழில்களை உடையவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள்! தியாகிகளாகவும், அருளாளர்களாகவும், சிறந்த நீதிபதியாகவும், பேராசிரியர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும், கோடீஸ்வரார்களாகவும் இருப்பார்கள். ஆனால் 8ஆம் எண்ணில் பிறந்த மற்றவர்கள் தங்களது பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியாமல் வாழ்க்கை முழுதும் தவிக்கின்றவர்களே. பெரும்பாலும் கொலை, களவு, கொள்ளை, கடத்தல், பொய்க் கையெழுத்து, விபச்சாரம், குடி, சூது, வரசம், நம்பிக்கைத் துரோகம் போன்ற பல்வகை சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்கள். ஆனால் மேற்கொள்ள துர்ப்பலன்களைக் கண்டு வாசகர்களே பயப்படவேண்டாம்! 

8 ம் எண்காரர்களும் அதிர்ஷ்டம் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டுமெனில் தங்களது பெயரினை மிகவும் ஆராய்ந்து, நல்ல பெயர் ஒலியிலும், பெயர் எண்ணிலும் வைத்துக் கொண்டால், தங்களது கெட்ட விதியினைக்கூட மாற்றிவிட முடியும்! பல அன்பர்கள் பெயரை சீர்படுத்தி பலனடைந்துள்ளார்கள். எனவே கவலைப்படவேண்டாம். அது மட்டுமன்று பிரபல சினிமா நட்சத்திரங்களும், பெருத்த வியாபாரிகளும், மிராசுதார்களும், அதிகாரிகளும், கோடீசுவரர்களும் 8ம் எண்ணில்தான் பிறந்துள்ளனர். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், ஈ.வெ.ரா பெரியார், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஜே.ஆர்.டி. டாட்டா போன்றோரெல்லாம் இந்த எண்ணில் பிறந்து, வெற்றிகரமாக வாழந்தவர்கள்தான். 

தெய்வ நம்பிக்கை இவர்களிடம் தீவிரமாகவே உண்டு! ஒன்று கடவுளே இல்லை! என்று வாதிடுவார்கள். அல்லது கடவுளே கதி! என்று இறைவனை நம்புவார்கள். தங்கள் நல்லதென்று நினைத்து, எடுத்துச் செய்கின்ற காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிக்கும் வலிமை இவர்களுக்கு உண்டு. ஓரளவு பிடிவாத குணம் நிறைந்தவர்கள். இவர்கள் மேற்பார்வைக்குக் கடின மனமும் பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரித்து வாழ்க்கையளிக்கத் தயங்க மாட்டார்கள். பலாப்பழம் போன்ற குணமடையவர்கள். 

பொது சேவைக்கான முயற்சிகள், எடுத்துக் கொண்டிருப்பார்கள். தங்களது வாழ்க்கையிலும், எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும், உறவினர்களையும் திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு, மக்கள் சேவைக்கென ஓடிச் செல்பவர்கள் இவர்கள்தான். தனிமனித வாழ்ககையானாலும், சமுதாய‌ வாழ்க்கையானாலும் எட்டாம் எண்ணின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டால், பெரிய சோதனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்றே எண்கணிதம் சொல்கிறது! சாகதத்திலும், எந்த ஒரு கிரகமும் 8ம் இடத்தில்(இராசிக் சக்கரம்) இருந்தாலும் (சனியைத் தவிர) அல்து கோசாரத்தில் 8ம் இடத்திற்கு வந்தாலும், அந்தச் சாதகர்கள், அந்தக் கிரகத்தின் காரணத்தால் பல துன்பங்களை நிச்சயம் அடைவார்கள் என்று சோதிட சாத்திரம் கூறுகிறது! 8ம் எண்காரர்கள் பெரும் தத்துவ ஞானிகளாகவும், மனிதர்களுக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் விளங்குகிறார்கள். 

இவர்களது தொழில் 

இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும் வெற்றி தரும். 8ம் எண் வலிமை பெற்றால் பொறியாளர்களாகவும், 8ம் எண்ணன் வலிமை குறைந்தால் டிப்ளோமா மற்றும் லேத் தொழில்கள் போன்ற வேலைகளில் ஈடுபடும் சாதாரணத் தொழிலாளிகளாகவும் இருப்பார்கள். லாரி, பஸ் போன்ற (சனியின் காரகத்துவ) தொழில் இவர்களுக்குப் பெருத்த அதிர்ஷ்டத்தைத் தரும். மில்கள் எண்ணெய் மில்கள், இரும்பு வியாபாரம் ஆகியவையும் நன்மை தரும். எண்ணெய் வியாபாரமும் நல்லது. ஆன்மீக மடாதிபதிகள், கோவில் தர்மகர்த்தா, ஊர்மணியகாரர் போன்றவர்ளாகவும் புகழ் பெறுவார்கள். 

மேலும் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்கு யோகத்தைத் தரும். விவசாயம், கட்டிங்கள் கட்டுதல், லேஅவுட் போடுதல் இவர்களுக்கு ஒத்து வரும். பெரிய நிலக்கிழார்களும், பெரும் விவசாயிகளும் இவர்கள்தாம். உலகத்தை மறந்து உழைப்பதால் இவர்கள் ஆராய்ச்சித் தொழில்களில் (Research and Development) பல வெற்றிகள் பெறுவார்கள். பூகோளம், மற்றும் (Geology) நில ஆராய்ச்சிகளில் இவர்களது வாழ்க்கை அமையும். 

8ம் எண்காரர்கள் மிகப் பெரிய பேச்சாளர்களாகவும், மதப்பிரசங்கிகளாகவும் விளங்குவார்கள். சுரங்கப் பொருட்கள் எடுத்தல், சுரங்கப் பொருள்கள் வியாபாரம் செய்தல் வெற்றி தரும். கிரனைட் கற்கள், கடப்பாக்கற்கள் வியாபாரம் போன்றவை வெற்றி தரும். கம்பளித் துணிகள், ஆயுதங்கள், சோப்புக்கள், வியாபாரம் மற்றும் உற்பத்தித் தொழில்கள் நல்ல இலாபத்தைத் தரும். இவர்கள் அச்சகம் (Press), சோதிடம், வைத்தியம் ஆகிய தொழில்களிலும் வெற்றியடையலாம். சிறைத் துறையும் (Jail Department) இவர்களுக்கு ஒத்தவரும். 

திருமண வாழ்க்கை 

இவர்களது திருமண வாழ்வு பெருமையாகச் சொல்லப்படவில்லை! திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும். தங்களது மனைவியுடன் கூட திறந்த மனதுடன் பழக மாட்டார்கள். சிலர் தனது மனைவிகளை அலட்சியத்துடன் நடத்துவார்கள். மனைவி எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவார்கள். இதேபோல் 8ம் தேதி பிறந்த மங்கையரும், தங்கள் கணவருடன் அன்பின்றியே நடந்து கொள்வார்கள். தன் மனம்போல் வாழ நினைப்பார்கள். இங்ஙனம் உண்மையான அன்பின்றியே பெரும்பலானா எட்டாம் எண் நண்பர்கள் வாழ்கின்றார்கள். 

இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது. நண்பர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சிறந்த நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 8ம் தேதி பிறந்தவர்களாலும் இவர்கள் நன்மையடையலாம். 6, 5 தேதியில் பிறந்தவர்களாலும் நன்மை அடையலாம்! 

இவர்களது நோய்கள் 

இவர்கள் பிறந்த தேதிகள். குடல் பலகீனம் உடையவர்கள். சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு! தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இரத்தத்தில் விஷச்சேர்க்கை எளிதில் ஏற்பட்டுவிடும். எனவே அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது! வாதம் மூட்டுப் பிடிப்புகளால் பாதிப்புகள் அதிகம் உண்டு. ஈரல் அடிக்கடி பாதிக்கப்படும். காபி, டீ, மது போன்றவற்றில் நிதானம் தேவை. உணவில் எலுமிச்சம் பழம், அன்னாசி, வாழை, சிஸ்மிஸ் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். 

அகத்திக்கீரை மிகவும் நல்லது! எண் 8. சிறப்புப் பலன்கள் மக்கள் அனைவரும் பயப்படும் 8ம் எண்ணின் சிறப்பு பலன் களைப் பற்றிப் பார்ப்போம். மக்களின் வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் ஆதாரமாக விளங்குவது இந்த 8ம் எண்ணே! ஆனால் மக்கள் இந்த எண்ணை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்த எண் விதியின் எண்ணாக இருப்பதால், நாம் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளை அனுசரித்து நல்ல பலன்களையோ அல்லது தீயபலன்களையோ கொடுக்கிறது! இவர்கள் எடுத்துக் கொள்ளும் எந்த செயலானாலும் அவற்றில் எதிர்ப்பும், முட்டுக்கட்டையும் உண்டு. 

ஆனால் எதிர்ப்பையும், தடைகளையும் பொருட்படுத்தாமல் காரியங்களில் ஈடுபடுவார்கள். வெற்றி பெறுவார்கள். இவர்கள் தங்களைப் போல் மற்ற பாதிக்கப்பட்ட மக்களிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள். மனதில் இரக்க குணம் இருக்கும். இவர்களில் பெரும்பாலோர் பெரிய சாதனைகளை, கடின உழைப்புடன் செய்து முடிப்பார்கள். இது விதியின் எண்ணாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் வெற்றியோ அல்லது தோல்வியோ தொடர்ந்து வந்த கொண்டே இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது கடமைகளை இவர்கள் தீவிர முனைப்புடன் செய்து கொண்டிருப்பார்கள். 

இவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்கு உண்மையான நன்மை செய்வார்கள். 8&ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு பெரும்பாலும் கிடைக்காது. இதனால் வெளியூர், அடுத்த இன மக்கள், வெளிநாடு என அந்நியர்களிடமிருந்தே இவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்கள் வந்தால், பின்பு தொடர்ந்து யோகம் வரப் போகிறது என்று பொருள். இதற்குக் காரணம் 8 என்பது இரண்டு பூஜ்யங்களால் உருவாக்கப்பட்டது. 0+0=8. எனவே, முயற்சிகள் எல்லாம் பயன் அடைவதும், பூஜ்யமாவதும் அவர்களது விதிப்படியே அமைகிறது. விதி என்றவுடன் பயப்பட வேண்டாம். இன்று நாம் செய்யும் நல்ல செயல்கள், நாளை நல்ல விதியாக அமைகின்றன! 

அலட்சியத்துடன் புரியும் தீய செயல்கள், நாளை நிச்சயம் கெட்ட விதியாக மாறி விடுகின்றன! எனவேதான் புறநானூறு கூறுகிறது. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனவே, நேர்மையான வழியில் உழைத்தால் வெற்றி மேல் வெற்றி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆரம்ப காலம் முதலே மக்கள் 8ம் எண்ணை விதியின் எண் என்று பயந்து வந்துள்ளார்கள். இது தனி மனிதன் வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்த எண்ணின் ஒரு பக்கம் கடுமையான உழைப்பு, கருணை, ஏற்றம், பெருத்த இராஜ யோகம் உண்டு. மறுபக்கம் புரட்சி, எழுச்சி, அராஜகம், ஒழுங்கின்மை போன்றவையும் உண்டு! எல்லாம் விதிப்படியேதான் நடக்கிறது என்று இவர்கள் புலம்புவார்கள். 

பல நேரங்களில் வாழ்வில் விரக்தியும் ஏற்படும். இருப்பினும் தங்களது வாழ்நாளிற்குள், இவர்கள் பெருத்த யோகத்தை அனுபவித்தே செல்வார்கள். மனம் விரக்தியடையும் போது தற்கொலை எண்ணங்கள் கூடச் சிலருக்குத் தோன்றும். இவர்கள் சிறந்த நீதிமான்கள், தெய்வத்திற்குப் பயந்தவர்கள். 8ம் எண்ணானது ஒரு மனிதனைப் புடம் போட்டு, அவனைத் தங்கமாக்கி விடும். இவர்களின் வாழ்க்கையில் எல்லா முக்யி நிகழ்ச்சிகளும் 8ம் எண் வரும் நாட்களிலேயே நடைபெறும்! கிரேக்கர்கள் இந்த எண்ணை “நீதியின் கண்” என்று அழைத்தனர். தாங்கள் எண்ணியதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும் என்ற தீவிர எண்ணம் உடையவர்கள். தாங்கள் நினைத்ததை அப்படியே வெளியில் சொல்ல மாட்டார்கள். 

தங்கள் வாழ்வின் பிற்பகுதியில்தான் பெரும்பாலோர் இன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவு. எனவே, அதை அவசியம் வளர்த்துக் கொள்ளவேண்டும். தங்களை உலகத்தில் தனிமையாக இருப்பதாக உணர்வார்கள். எனவே எளிதில் அடுத்தவர்களை நம்ப மாட்டார்கள். இவர்களுக்குப் பெயர் எண் நன்றாக இருந்தால் மட்டுமே, கெட்ட விதியினை மாற்றிக் கொள்ள முடியும். அதில் கவன குறைவாகவோ, அலட்சியமாகவோ நடந்து கொள்ளும்போது, துன்பங்கள் தொடர்ந்து வரும். பிறர் படும் துன்பம் கண்டு சகிக்காத மனம் கொண்டவர்கள். தங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், உதவிகிட்டும் இடத்தையாவது காட்டுவார்கள். 8ம் எண்ணின் ஆதிக்கம் குறைந்தோர் திருட்டு, வழிப்பறி, கொலை, விபச்சாரம் போன்ற வழிகளில் துணிந்து ஈடுபடுவார்கள். 

அதனால் நிச்சயம் தண்டனையும் (சிறை) அடைவார்கள். எந்தச் செயலையும் சற்று மெதுவாகவே செய்வார்கள். தரையைப் பார்த்தே நடப்பார்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும், நடுவராக இருந்து நீதி சொல்லச் சிறந்தவர்கள். தம்மிடம் நட்புக் கொண்டவர்களையும், பகைமை கொண்டவர்களையும், தமது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். உடல் உழைப்பில் இவர்களுக்கு நாட்டம் அதிகம். பெரும்பாலும் தனிமையாக இருப்பதையே விரும்புவார்கள். இவர்களது பேச்சில் விதி, வாழ்க்கை, தர்மம் என்று அடிக்கடி வார்த்தைகள் வரும். இவர்களுக்குக் காதல் விவகாரங்கள் வெற்றி கொடுக்காது. திருமணமும் பொதுவாக அன்னியத்தில் (அடுத்த ஜாதி, மதம், அந்நியநாடு) தான் நடக்கும். 

இவர்களது செல்வ நிலை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும். எந்த முன்னேற்றம் வந்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் பல சோதனைகள் கூடவே வந்துவிடும். சுதந்திரமான தொழிலைக் காட்டிலும், அடுத்தவர்களின் கீழ் வேலை செய்வதையே விரும்புவார்கள். ஆனால் 8ம் எண் வலிமை பெற்றவர்கள். பெரும் தொழில் அதிபர்களாகவும், கடல் கடந்து தொழில் செய்யும் வல்லுநர்களாகவும் இருப்பார்கள்! உடம்பிலோ அல்லது மனத்திலோ ஏதாவது ஒரு குறை அல்லது நோய் இருந்து கொண்டே இருக்கும். 

அதிர்ஷ்ட நாள் Lucky Dates 

இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய நாட்கள் மிகச் சிறந்தவை. 8&ம் எண்ணின் தீய குணங்களை 5ம் எண் மட்டுமே போக்கும் வல்லமை படைத்தது. எனவே, 5, 14, 23 ஆகிய நாட்களும் இவர்களுக்கு நன்மையே புரியும். எனவே கூட்டு எண் 1 மற்றும் 5 வரும் நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை. 4, 13, 22, 31 நாட்களில் நல்லவை தாமாகவே நடக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் இவர்கள் அந்த நாட்களில் தேடிச் செல்லக்கூடாது! 9ம் எண்ணும் நல்ல பலன்களையே செய்யும். ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய நாட்களும், 2, 11, 20, 29 நாட்களும் கெட்ட பலன்களையே கொடுக்கும். கூட்டு எண் 8 மற்றும் 2 வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும். 

அதிர்ஷ்ட இரத்தினம் Lucky Gems 

இவர்களுக்கு நீலம் (Blue Sapphire) என்னும் இரத்தினக் கல்லே மிகவும் அதிர்ஷ்டமானது! ளிறிகிலி (மரக்கல்) என்ற இரத்தினக் கல்லையும் உபயோகிக்கலாம். மேலும லெபராடோரிட் (LABRADORIATE) லாஜர்த் (LAPIS LAZULLI) என்னும் கற்களையும் உபயோகப்படுத்தலாம். 

அதிர்ஷ் நிறங்கள் Lucky Colours 

இவர்களுக்கு மஞ்சள் நிறமே சிறந்தது. ஆழ்ந்த பச்சை, நீலம் ஆகியவை நன்மை தரும். மற்றவர்களை சந்திக்கச் செல்லும்பபோது எப்போதும் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகள் சிறந்தவை. கருப்பு, பாக்குக்கலர் மற்றும் கரும்சிவப்பு ஆகிய நிறங்களைத் தவிர்க்க வேண்டும். 

8ஆம் தேதி பிறந்தவர்கள் : 

இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியான வாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள். 

17ஆம் தேதி பிறந்தவர்கள்: 

இவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல் உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் சேர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும். இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்கு மாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும், சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள். 

26ஆம் தேதி பிறந்தவர்கள் : 

பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி/ தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள். இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும். இவர்கள் மக்கள் அனைவரையும் எந்த வித்தியாசமின்றிச் சமமாக நேசிப்பார்கள் காதல் விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்படும். 

எண் 8ன் (Saturn) தொழில்கள் 

இவர்கள் கடின உழைப்பாளிகள். சனி ஆதிக்கம் குறைந்தவர்கள் கூலியாகவும், Technician களாகவும் இருப்பார்கள். கடலை, எள்ளு, கம்பு, மலை வாழை, புகையிலை, மூங்கில், கீரை வகைகள், மரம், விறகு, கரி, எண்ணெய் வியாபாரம், உதிரி பாகங்கள்(Spares) விற்பனையும் நன்கு அமையும். ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில்கள், பட்டிட வேலை மேஸ்திரி, தபால் துறை, துப்பறியும் துறை (Detective) துப்புரவுத் துறை (Sanitary)யிலும் நன்கு பிரகாசிக்கலாம். அச்சுத் தொழில், பைண்டிங் போன்றவையும் நன்கு அமையும். பலர் பொறுமைசாலிகள், ஆராய்ச்சியாளர்கள், கணிதம் பூகோளம், நில ஆராய்ச்சி (Mining), தத்துவம், பௌதிகம் (Chemsitry), இரும்புத் தொழில்கள் போன்றவையும் நன்கு அமையும். 

பிராணிகள் வளர்ப்பு, வைத்திய தொழிலம் பார்க்கலாம். விவசாய முதலாளிகளும் (Landlord), தொழிலாளிகளும் (Labourers) இவர்களே. பலர் பெரிய தொழிலதிபதிகளாகவும் வெற்றி பெறுவார்கள். போக்குவரத்து தொழில்கள் (Mechanic. Drivers etc) மூலம் நன்கு சம்பாதிக்க முடியும். லாரி, பஸ்கள் நடத்துதல் மூலம் நன்கு பணம் சேர்க்க முடியும். டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களாகவும் பணி புரிவார்கள். வெளி நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். இரும்புச் சுரங்கம், நிலத்தடியில் இருக்கும் கற்கள் சுரங்கத் தொழில் போன்றவையும் ஒத்து வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலும் வெற்றி தரும். கட்டிட வேலைகள், இன்சினியரிங் பணிகள் இவர்களுக்குப் பிடித்தமானவை! கடுமையான உழைப்பை எதிர்பார்க்கும் தொழில்கள், கருவிகளை இயக்குபவர்கள் (Heavy M/C Operators) போன்றவையும் இவர்களுக்கு நன்கு அமையும். 

உழவுத் தொழிலும், எண்ணெய், இரும்புகள், லாரி வியாபாரங்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையும் இவர்களுக்கு உரிய தொழில்கள். சிறைச்சாலைத் துறை, மக்கள் நிர்வாகத்துறை, தோல், செருப்பு (Leather) விற்பனையும் இவர்களுக்கு நன்கு அமையும். நில அளவையும், விவசாயமும் இவர்களுக்கு ஒத்து வரும். எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் இவர்களுக்கு ஒத்து வரும்.

ஏனைய இலக்கங்களுக்கான பலன்கள்