Breaking News

கொடுத்த இன்பம் – சிறுகதை – தமிழ்க்கவி’


‘சாந்திக்கு வலி கண்டிட்டுதாம்’
‘ங…தாய்க்காறியும் இல்லையே…நேற்றுத்தானே ஏதோ செத்த வீடெண்டு போனா..’
‘ம்….பேரக்கிழவி நிக்குது போல…வாங்கவன் பாத்திட்டு வருவம்’
‘ எட என்னடா?….உனக்கு வெளிக்கிட்டா பள்ளிக்கூடம் போவன். ..கொஞ்சம் இரக்கா இவனைப் பள்ளிக்கூடம் அனுப்பிப்போட்டு வாறன்’ கமலம் பையனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் மும்முரத்தில் நின்றாள்.
‘அப்ப நீ பிறகு வா…நான்போய்ப்பாக்கிறன் என்ற வாறே சரசு வேகமாக நடையைக்கட்டினாள். சாந்தி இவளுக்கு மச்சாள் இவள் அவளுடைய அண்ணன் மனைவி. இப்போதுள்ள மாதிரி அண்ணி,சித்தி, எல்லாம் அப்போது கிடையாது . பத்மினி நடித்த சித்தி படம் வந்த காலத்தில்தான் இங்கேயும் சித்தி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.
‘இப்பத்தையில் பொண்டுகளுக்கு படங்களப் பாத்துப்பாத்து புது மோடியில யெல்லே குநட்டுகினம். ‘ஏன்ரீ…அண்ணன் பெண்டில் அண்ணியெண்டா தம்பி பெண்டில் தண்ணியே…? வள்ளிப் பெத்தா புறுபுறுக்கிறதுதான். அதென்னவோ சரசுவும் புது மோடியில் இறங்காமலும், மச்சாள் என்று கூப்பிடாமலும், சாந்தீ என்றே கூப்பிடுவாள் அவளும் இவளை சரசு என்றே அழைப்பாள். இருவரும் ஒரே வயதில் இருந்ததும் ஒரு காரணம் எனலாம்.
சாந்தி தன் இருகைகளையும் நாரிக்குக் கொடுத்து நிமிர்ந்து நின்றாள். பின் சற்று நேரத்தில் , வந்தவர்களுக்குப் பாய் எடுத்துப் போட்டாள் ‘இருங்கக்கா’.என்றாள் அப்படியே அடுப்பில் கொதித்தபடியிருந்த கேத்திலை இறக்கி வந்தவர்களுக்கு தேநீர் ஊற்றினாள்.
‘இருக்கட்டும் பிள்ளை ….வயித்துக்க என்னமாரிக்கிடக்கு’ எனறு கேட்டாள் செல்லம்மாக்கிழவி.
‘வயுத்துக்க ஒண்டுமில்லயணை நாரிக்கதான் புடுங்குதணை’ சரசு மெதுவாக செல்லம்மாக்கிழவியிடம் நெருங்கி ‘மெய்யேணை ..செல்லம்மாக்கா குறி கண்டிட்டுதோ எண்டு கேளணை?’ என்றாள்.
‘எடி ..தலைச்சன்பிள்ளைகாறிக்கு உதுகள் விளங்குமே… கேக்கிறன்’ என்றவள். சாந்தியை நெருங்கி மிக ரகசியமாக ‘.....?..’.என்றாள்
‘ அப்பிடியெண்டா..? ”சாந்தி மிரண்டவாறே கேட்டாள்.
‘ச்ச அரையுக்க ஏதும் சளிபோல தீட்டுப்போல ஏதும் படுதோ’
‘இல்லப் பெத்தா அப்பிடியொண்டுமில்ல’ ; சொல்லும் போதே அவள் வெட்கப்பட்டாள்.
‘ஙா….நேரங்கிடக்குப்போல’
சாந்தி தேநீரை ஊற்றி எட்டியெட்டி எல்லோருக்கும் வைத்தாள். அப்படியே வெற்றிலைத் தட்டத்தையும் நகர்த்தி வைத்தாள். காலையிலிருந்து வாழைத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மண்வெட்டியைக்கொண்டுவந்து முற்றத்தில் நின்ற மல்லிகைப்பந்தலின் கீழ் போட்டுவிட்டுத் திரும்பும்போது லேசா நாரிக்குள் வலித்தது.

அப்படியே விடுவிடுக்கத் தொடங்கிவிட்டது. புயத்தில் மச்சாள் சரசுவுக்கு தெருவில்போன ராசுவைக்கூப்பிட்டு விசயஞ்சொல்லிவிட்டாள். சரசுவைத்தேடிப்போன சின்னவன் செல்லம்மாக்கிழவியிடமும் சொல்லிவிட்டுச்சென்றான் வயல் விளைந்துகிடந்தது இந்த நேரம் காவலை விலக்க முடியாது.அவன் கமத்துக்குப் புறப்பட்டான்.
சின்னவன் வீரகத்தியற்ற கடைக்குட்டி. ஊருக்க யார் கெட்டாலும் ஓடிப்போய் உதவி செய்வான். பீடி, சுருட்டு வெத்திலைபாக்கு எந்தப் பழக்கமும் இல்லை. ஏப்பவாவது கடுமையான வேலையென்றால் மட்டும் ஒரு காப்போத்தல்ல பாதி சாராயங் குடிப்பான். அதுவும் நாலாம் பேருக்கும் தெரியாது. நான் நீயென்று பெண் கொடுக்க போட்டி போட்டார்கள். ஆனால் அவனுக்கப்பிடித்தது சாந்தியைத்தான்.
அவனுக்கேத்தமாதிரி தோட்டத்தில பாடுபடவோ, கட்டுச் செட்டா சிக்கனமாக் குடும்பம் நடத்தவோ அவளை மிஞ்ச ஆளே கிடையாது என்னா…கட்டி மூண்டுவருசமாகிது .இப்பதான் வயிறு வாய்ச்சிருக்கு அதனாலோ என்னவோ ஊரே அவளை கவனமாகப் பார்த்தது.
வீரகத்தியார் வாறபோற நேரமெல்லாம் கடையில் தீன்பண்டங்களைக் கொண்டுவந்து மருமகளுக்கு கொடுக்கத்தவற மாட்டார். நல்ல வாரப்பாடு. ஏதோ அவள் வயிற்றிலுள்ள தன்பேரக் குழந்தைமீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார். ஒருதடவை சின்னவனுடைய சாதக ஓலையைக் கொண்டுபோய் பிராமணிச் சாத்திரியெட்டைக் கேட்டவராம் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கமோ எண்டு சாத்திர் சொன்னவராம் வாறவரியம் உனக்குப் பேரன் கையில இருப்பானென்று.
நாலைஞ்சு மாதமாயிருக்கயுக்க ஊர்மருத்துவிச்சி வந்து பாத்திட்டு காட்போட்டுக் குடுத்திருக்கிறா போய் கிளினிக்கில காட்டச்சொல்லி சொன்னவாவாம். சாந்தி சொன்னபடிக்கு வெளிக்கிட்டு சுகாதார ஆசுப்பத்திரிக்குப் போனவள் அவைபார்த்து நிறைய குளிசைகளும் கொடுத்து கவனமாப் பார்க்கச்சொல்லி ஆலோசனை கொடுத்தார்கள்.

அதுக்குப்பிறகு தோட்டவேலை அது இதெண்டு போக சேரங் கிடைக்கிறேல்ல அப்பிடியும் ஒருநாள் போனாள் அப்ப ஏழு மாசம் முடிஞ்சு எட்டுமாசம் துவங்குது. ‘ஏன் இவளநாள் வரயில்லை’ என்று சரியான பேச்சாம் அதற்குப்பிறகு சின்னவன் போகவேண்டாம் என்று கூறிவிட்டான்.இனி கொண்டுவந்த குளிசையளும் அப்பிடி தொண்டைக்க போட்டா கறள் நாத்தம். ‘உவ்வேக்’ சத்திவாறமாரிக்கிடக்கு என்று சாந்தி சொன்ன படியால் சின்னவனும் ‘பிறகேன் அதைப் போடுறாய் விடு என்று கூறிவிட்டான்
‘ஆட்டுப்பாலோ பசுப்பாலோ முட்டையோ கீரையோ மரக்கறியோ எல்லாம் கிடக்கு வடிவாச்சாப்பிட்டா காணாதே ‘ இது சின்னவனின் வாதம்.
‘அவளோடு; கிளினிக்குக்குப் போன கோமளாவும் மேரியும் பெத்துப்போட்டினமாம்.’செல்லம்மாக்கிழவி சொன்னாள்.
‘ஓமணை நானும் போய்ப் பாத்தனான்,’
‘ சுகமாப் பெத்துப்போட்டாளாமே’?
‘தையலாமெணை..’
‘எத்தின தையலாம்?’
‘ நாலு தையலெண்டாள்’
‘அந்தக்காலத்தில எவள பிள்ளையளப் பெத்திருக்குங்கள் ஆர்தைச்ச? ஆர்கிழிச்ச,?இப்பானெல்லோ உந்த நூதனங்கள். ‘செல்லம்மாக்கிழவிக்கு பதில்சொல்லாமல் எட்டி தட்டியில் ஒரு ஈர்க்குத் துண்டை முறித்து பல்லுக்குள் எதையோ துளாவ ஆரம்பித்தாள்.
‘என்னடி உது? என்று கேட்டவாறே வந்தகமலம் ‘என்னவாம் சாந்தி?’ ஏன்றாள்.
கிடுகால் வேய்ந்து அரைவாசிக்கு மண் சுவர் வைத்து மேலுக்கும் கிடுகுத்தட்டி கட்டிய அந்த சிறு வீட்டுக்கு இடையில் ஒரு கிடுகுத் தட்டி அதை இரண்டாகப் பிரித்திருந்தது. ஊள்வீடு. வெளிவீடாக. வேலி வீட்டின் கிழக்குமுலையில் அடுப்பு இரண்டு மண்ணாலானது இரண்டு பலகைப் பரண்கள் வளையில் கட்டித் தொங்கவிட்டிருந்தது.

அதில் பொருட்கள் அடுக்கப்பட்டுக் கிடந்தது வீடு அடிக்கடி சாணிபோட்டு மெழுகியதில் வழுவழுவென்றிருந்தது அடுப்பில் கேற்றில் கிடந்தது வலியோடு வலியாக சமைத்து முடித்த சாந்தி சோற்றுப்பானையை ஒரு திருகணையிலும் இன்னொரு திருகணையில் கறிசிசட்டிகளை யம் அடுக்கினாள் கீழ் சட்டி சொதி. நடுச்சட்டி கீரைச்சுண்டல் மேற்சட்டி மரை வற்றலுடன் கத்தரிக்காய் போட்ட குழம்பு .சின்னவனுக்கான சாப்பாட்டைப் பொட்டு வீரகத்தியிடம் கொடுத்துவிட்டு செல்லம்மாக்கிழவிக்கும் சாப்பாடு பரிமாறினாள்.நீ முதல் சாப்பிடுபிள்ளை’ என்ற செல்லாம்மாவிடம்,
‘நாரி வரவரக் கடுமையாக் கொதிக்குதணை’ என்றாள் சாந்தி
‘பரவாயில்லைப்பிள்ளை வலிகூடினா சாப்பிட மாட்டாய் தஞ்சக்கேடாப்போம் எபபன் சாப்பிடு ‘என வற்புறுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்தாள். இவற்றையெல்லாம் அருகிலிருந்தே பார்த்த சரசு
‘மெய்யேணை சுணங்கும் போல என்னணை’ என்றாள்.இதைக் கேட்ட கமலமும் ,
‘பின்ன, எனக்கு மூத்தவள் பிறந்த நேரம் உப்பிடித்தான்….இரவே எனக்கு வலிக்கத்துவங்கிவிட்டுது நான் பல்லைக்கடிச்சுக்கொண்டு இவரட்டக்கூடச் சொல்லயில்லை. மளமளண்டு சமைச்சிட்டுக் குளிச்சன். பொழுதும் படுது….அப்பப்பா ….எனக்கு…நிக்கேலாமக்கிடக்கு….அதுக்குப்பிறகுதான் சின்னப்பிள்ளையக்காவக் கூப்பிடுங்கோ எண்டன்.’
அப்ப…. உவனை வீட்டிலயே பெத்தனி?’
‘பின்ன …இனி ஆஸ்பத்திரிக்குப் போவன்?’ என்றாள் இளக்காரமாக, தொடர்ந்து
‘:சுக் அங்கயும் போய் நாங்கதான் முக்கவேணும்….’
‘மெய்தான்…இனி தலைப்பிள்ளை, எதுக்கும் ஆஸ்பத்திரி பாதுகாப்புத்தானே…?’
‘சும்மா விடு …அவளவை ,வா…போ…எண்டுறதும்..அதட்டுறதும்…இனி வலியல் கத்தினா அடிக்கிறாளவையாம் …நான் முதலே சொல்லிப் போட்டன். ஆசுப்பத்திரிக்கு மாட்டனெண்டு….அவளவை எப்பனெண்டவுடன அறுத்துப்போடுவாளவை.’
சரசு எல்லாவற்றையும் கேட்டாலும் கமலத்தோடு உடன்படவில்லை
‘இக்கணம் வீட்டில பாக்க வெளிக்கிட்டு பிரச்சனையாப் போச்செண்டா…பிறகு ஆஸ்பத்திர்க்கு கொண்டு போகபேசுவாங்கள் அதுதான் பயம்’
சாந்தி மிரண்டவாறே இவர்கள் பேசுவதைக்கேட்டுக்கொண்டிருந்தாள். மெள்ள மெள்ள நாரி வலி உறைக்கத்தொடங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை.
‘சரசு எப்பன் வெந்தயம் எடு . ‘என்றவாறே புது மண்சட்டி ஒன்றை எடுத்து அதைக்குழுவி அதில் வெந்தயம் ஒரு சிறங்கையைப்போட்டு செல்லம்மா ஒரு வெள்ளைப்பூட்டையும் உரித்து அதில் போட்டாள். ‘கமலம் உதில உந்த பின் வேலியில எட்டி ஒரு துண்டு பட்டை வெட்டிக்கொண்டுவா’ என்றாள் பட்டைவெட்டப் பொகேக்க வாய்பேசக் கூடாது என்பது பொதுவாக கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும்.
பட்டை (முருங்மை) வந்ததும் அதன் பொருக்கைச்சீவிவிட்டு அதையும் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றினாள். நன்கு அவிந்து வர அதை அகப்பையால் கடைந்துவிட்டு இறக்கி வடித்து ஒருகுடி கோப்பையில் வட்டு ‘சாந்தி வா மோனை இந்தா எப்பன் சூட்டோட கண்ணை மூடிக்கொண்டு மடமடண்டு குடிபாப்பம்’ நீட்டினாள்.
சாந்தி மறுப்பில்லாமல் வாங்கி மளமளவென்று குடித்துவிட்டு கோப்பையை நீட்டும்போது’உவ்வே ஏஏஎக்’ சத்திவருவது போலஇருந்தது. அவ்வளவு கசப்பு. முகத்தைக்கோணி அருவருத்தாள்.’
‘ம்….சூட்டுவலியெண்டா அடக்கிப்போடும். இல்லையெண்டா குத்தெழும்பீடும்.’ செல்லம்மா தனக்குள்பேசியவாறே கோப்பையைக் கழுவி வைத்தாள்.
குமலம் புறப்பட்டாள் ‘நான் போட்டு வாறனணை பிள்ளை ரியூசனால வந்திடுவாள்’ கமலம் எழுந்தபோது படலைக்குள் வேறுஇருவர் வருவது தெரிந்தது.
நாகமணியும் , ரஞ்சியும். படலைக்குள்ளேயே அவர்களை எதிர்கொண்ட கமலம்,’ நல்ல குத்தில்ல…’ என்று விட்டுப் போனாள்.
‘ணேய் சண்டி நோக்காடு போல ஏதும் குடுத்துப் பாத்தியே’ என்றாள் வந்த வரத்திலேயே கேட்டாள் நாகமணி.
‘இல்லை நீ வரட்டுமெண்டுதான் பாத்துக்கொண்டிருந்தனான். ‘ என்றாள் செல்லம்மாக்காள் கிண்டலாக.
‘கிளினிக் பேகேல்லயே’ என்றாள் ரஞ்சி..’
‘ போனனான்’ என்றாள் சாந்தி.
‘அப்ப காட்டில டேற் தந்திருப்பினமே எங்க காட்டப் பாப்பம்’? என்று கேட்டாள்.
சாந்தி கட்டி தொங்க விட்டிருந்த பையொன்றைத் துளாவி ஒரு காட்டை எடுத்துக்கொடுத்தாள் . அதை வாங்கி கவனமாகப் பார்த்த ரஞ்சி ‘இந்தா போட்டிருக்கே இருவத்தெட்டாம் திகதி. ம்…;;;இண்டைக்கு பதினெட்டுதானே…. நாள்கிடக்கு’ என்றரஞ்சி காட்டை திருப்பிக் கொடுத்தாள்.
‘போடி விசர், நிறைமாதப் பிள்ளைத்தாச்சியையும், மாரிமழையையும் நம்ப ஏலாது எப்ப எது நடக்குமெண்டு சொல்லேலாது .முந்தும்,பிந்தும் உதெல்லாஞ் சொல்லிக்கொண்டே’செல்லம்மாக் கிழவியின் அனுபவம் பேசியது.
சாந்திக்கு உயிர் பிரிவது போல வலி சுருட்டி எடுத்தது. தாங்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை .’ச்ச காச்சல் தடிமனேண்டாக்கூட வழுந்து படுத்திரலாம் இது படுக்கவும் விடாதாம். எழும்பித்திரியவும் விடாதாம்.’ முழங்கால்களில் கைகளையூன்றி குனிந்து நின்று பெருமூச்சு விட்டாள் ‘ஆ…தாங்கேலாமக்கிடக்கே’ அவளுடைய உணர்வுகள் கலங்கி உச்சந்தலை வரை நடுங்கியது
செல்லம்மா ‘ பிள்ளை நட கிணத்தடிக்கு ம்….குளிச்சிட்டு வா’ என்றாள் ரஞ்சி கூடப்போனாள்.’
குளிச்சிட்டு வந்த சாந்திக்கு சோற்றைப்போட்டு ஒரு மிளகுரசம்வைத்து ‘சாப்பிடுபிள்ளை’ என்ற செல்லம்மாவைவை நடுங்கும் கைகளால் இறுக்கிப்பிடித்த சாந்தி ‘வேண்டாமெணை ஏலாமக்கிடக்கு’
வெளியே குந்தியிருந்த வீரகத்திக்கும் கொஞ்சம் சோறு போட்டுக்கொடுத்தாள் செல்லம்மா
‘பிள்ளை சாப்பிடு பிறகு தஞ்சக்கேடாப்போம் எப்பனா சாப்பிடு பிள்ளைப்பெறவும் சத்து வேணுமே..ம்…பிடி’
கிராமத்துப்பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர் சிலர் பாசத்தோடும் சிலர் விடுப்புப் பார்க்கவுமாக வருவதை பேச்சிலறியக் கூடியதாக இருந்தது.
வயலை நம்பிய சீவியம் வெள்ளாமையும் நிறை சூலியாக நின்றது வயல். வீரகத்திக்கோவயதாகிவிட்டது. காவல் சின்னவன்தான் பார்த்தாக வேண்டும். காலையில் அவன்புறப்படும் போதே சாந்திக்கு ஒரு மாதிர்யாகத்தான் இருந்தது. ஆனால் அவன் மனம் வருந்துவானே என்று சொல்லவில்லை. மருமகளுக்கு வலிகண்ட நேரம் மகன்இல்லையே என்று வீரகத்தி ஓடிவந்தார்.
‘ பிள்ளை….குட்டியின்ர காருக்குச் சொல்லி விடவே?’
‘இல்ல மாமா வீட்டவிட்டிட்டு ஆஸ்பத்திரியில பொய் நிக்க இஞ்ச ஆடு, மாடு, கோழி, தோட்டமெல்லாம் அலாதில போயிரும் என்னைப்பாக்க அங்கயும் இஞ்சயும் அலையிறதில சரியாப்போம் …நீங்க ஒருக்கா சின்னப்பிள்ளையக்காவுக்குச் சொல்லி விடுங்கோ’

அவளுடைய மனத்துள் அறுக்கிறதும் தைக்கிறதும் தான் அநாதையா நிண்டு வலியில துடிக்கிறதும் தெரியுது ‘.அம்ம்ம்மாஆ…’.என்றவள் நிமிர குப்பென்று வேர்க்கிறது . ‘அது என்ன குளிரெண்டாலும்..அந்த நேரத்தக்கு வருமே ஒரு வேர்வை’ செல்லம்மாக்கா நாகமணியோடு பேசிக்கொண்டிருந்தா வந்தவர்கள் வலியில் துடிக்கும் அவளுக்கு முன்னால,; தத்தமது பிரசவ அனுபங்களைப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘நீங்க சொல்லுறீங்கள் கோமளாவுக்கு நல்ல அடியாம். வலியில கத்தைக்க என்ன தெரியும் பொத்து வாய அங்கால ஆம்பிள வாட்டெண்டு சொன்னாளாம் ஒருத்தி.’
‘இல்லாட்டி ஆம்பிளையளுக்கு ஒண்டும் தெரியாது’ பழிப்புக்காட்டினாள் ஒருத்தி
சாந்தி தட்டுத்தடுமாறி நடந்து ஃசுவாமிப் பலகையிலிருந்து விபூதியை எடுத்து நெற்றியிலிட்டுக்கொண்டாள். ‘எல்லாத்துக்கும் நீதான் வைரவா காப்பாத்து’ என்று வேண்டிக்கொண்டாள். அடிவயிற்றில் நெருப்பைக் கொழுத்திப்போட்டது போல வலி சுழன்றது’ அய்ய்ய்க்க்கஸ்ஸப்பா….’ குனிந்து முழங்கால்களைப் ;பிடித்துக்கொண்டாள் .
‘பிள்ளை குனிஞ்சு நில்லாத பிள்ளை மேலுக்கு ஏகிரும்’ நாகமணி தன் விற்பன்னத்தை தெரிவித்தாள்.
‘அவள்பாவி சும்மா இருக்கேல்ல பாடுபட்ட உடம்பு சுகமாப் பெத்துப்போடுவாள்.’என்றாள் இன்னொருத்தி. சாந்திக்கு அடுத்து வந்த வலி அவள் அறிவைச் சிதறடித்து உச்சந் தலைவரை பரவி கைகால்களை நடுங்க வைத்தது ‘ங்….க்க்க்…ஆ….ங்க்’ மனதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும்.முனகலை அடக்க முடியவில்லை.
வீரகத்தி வெளியே ஓடினார். பெண்கள் அவளைப் படுக்க வைக்க முனைந்தனர். படுக்கத்தான் அவளும் விரும்பினாள் என்றாலும் அவளைப் படுக்க விடாமல் அடுத்தவலி வயிற்றையும் நாரியையும் சேர்த்து இறுக்கியது. துடித்து எழுந்தவள்.பாய்ந்து தட்டியைப் பிடித்தாள் .நிற்க முடியாமல் நெளிந்தாள்.
சின்னப்பிள்ளையக்கா வந்தபோது,வேர்த்து விறுவிறுத்தபடி நின்ற சாந்தி பயந்து அவளைக் கட்டிக்கொண்டாள். ‘அக்கா ஏலாதாம் ஏதோ அடைக்கிறமாதிரி கிடக்குது.’
‘சின்னப்பிள்ளை உள்ளுக்க ஆயத்தஞ்செஞ்சு கிடக்கு’ என்றாள்செல்லம்மாக்கிழவி. சின்னப்பிள்ளையக்கா அவளை விலக்கிக்கொண்டு ‘வீட்டுக்க போ பிள்ளை’ என்று சாந்தியை அனுப்பினாள். அவர்களை முந்திக்கொண்டு பாய்விரிக்க, இடம் ஒதுக்க என்று வந்திருந்த பெண்கள் உள்ளே நுளைந்தனர்.
சின்னப்பிள்ளையக்காவுக்கு நல்லா ஏறிட்டுது.
‘என்னடி இஞ்ச படமே.. காட்டப்போறன்…ங…அங் வெளியால போங்க எல்லாரும்’….என்றவள் திரும்பி, ‘ணேய் செல்லம்மாக்கா வாசலுக்க இரணை தேவையில்லாதவைய உள்ளுக்க விடாத’ என்றவள் சாந்தியை படுக்கவைத்தாள் முழங்கால்களை உயர்த்தி பாதங்களைக்குத்தி மல்லாந்தவளின் வயிற்றை நன்கு கவனித்துவிட்டு ஏனைய இடங்களையும் பார்த்தாள் . பின்னர் ‘மெல்ல எழும்புபிள்ள’ எனறாள்.

‘பயப்படாத ஓண்டும் பிரச்சனையில்லை வெளியால பாம்மா காத்தாட கொஞ்சம் நட…என்றுவிட்டு ‘வீரகத்தி…வீரகத்தி…என்று கூப்பிட்வாறே வெளியே வந்தாள் . அவரைத் தனியே கோஞ்சம் தள்ளிக்கொண்டு போய் அவரிடம …’.நேரங்கிடக்கு..அண்ணை இப்ப மூண்டு மணியிருக்குமே…பத்து பதினொரு மணி செல்லும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்போறியளோ’என்றாள். அப்போதுதான் அந்த இடத்துக்கு வந்த சாந்தி ‘வேண்டாமக்கா நீங்கள் பாத்துவிடுங்கோ புண்ணியங்கிடைக்கும்’ அவள்கண்கள் கலங்கியிருந்தன.
வெளியே வீட்டுக்குப்பின்புறமாக அடைத்திருந்த கிடுகுக் கூட்டுக்குள் சென்று சிறுநீர்கழித்தவிட்டு வந்தவள்.
‘அக்கா கக்கூசுக்கு வருது போகட்டே ‘ என்றாள். அயலில் உள்ள பற்றைக்காடுதான் அங்குள்ள மக்களின் கழிப்பிடமாக இருந்தது.
‘வேண்டாம், கொஞ்சம் பொறு என்ற சின்னப்பிள்ளையக்கா மல்லிகைப்பந்தலின் கீழ் இருந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த மூத்திரக்கூட்டக்குள் சென்று ஒரு சிறு கிடங்கை வெட்டினார். ‘அந்தக் கிடங்கில் மலங்கழித்து மூடலாம் தூரப்போகாதே:’ என்றார்
சாந்தி அடிக்கடி அதற்குள் போய் வந்தாலும் மலங்கழிக்கவில்லை . சின்னப்பிள்ளையக்கா கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார். ‘ஆளுக்கு பிள்ளை கீழ இறங்கீற்றுது அதுதான் கக்கூசுக்குப் போகவேணும் போல கிடக்கு’ என்றாள் செல்லம்மாக்காவிடம்.
செல்லம்மாக்கிழவி வெற்றிலைத்தட்டத்தை தன் பக்கமாக இழுத்து இரண்டுமூன்று பாக்குப்பிளகைக் கையிலெடுத்து பாக்குரலில் போட்டு நச்நச்சென்று இடித்தது.சாந்தி இதைக்கவனித்து விட்டு
‘ணய் வெள்ளெணக்கூட வந்திருக்கிறாய் சாப்பிடணை பானைக்க சோறிருக்கு கறியும் கிடக்கு போட்டுத் தரயில்லயெண்டு குறைநினைக்காதை ஏலாமக் கிடக்கணை ம்… மாமாவும் சாப்பிட்டாரோதெரியா….’ வலியுடன் குனியவும் நிமிரவுமாகத் துடித்தாலும், வந்தவர்களைக் கவனிக்க முடியவில்லையே என்று வருந்தினாள்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் செல்லம்மா பாக்கைஇடித்த பின் வெற்றிலையை எடுத்த அதில் சுண்ணாம்பைத் தடவி மடித்து அதையும் உரலில் திணித்து இடித்தது வெற்றிலை செக்கச் செவேரெனச்சிவந்து குழையலாக வந்தபின் ஆட்காட்டிவிரலால் துளாவி இடது உள்ளங்கையில் கொட்டி பக்கென்று வாயில் போட்டுக்கொண்டது.
வீரகத்தி வெளியில் நின்றபடியே வீட்டுக்குள் கையை நீட்டி வாசலுக்கு நேரே கொழுவியிருந்த சிம்னி விளக்கை எடுத்துத்துடைத்து எண்ணைய்விட்டார்.மாலை மங்கத்தொடங்கமுன்பே வந்திருந்த பெண்கள் தத்தம் வீடுகளுக்கு செல்லவாரம்பித்தனர். சேல்லம்மாவும் சின்னப்பிள்ளையுமே வீட்டில் நின்றனர்.

வீரகத்தி மல்லிகைப்பந்தலின்கீழ் பொடப்பட்டிருந்த பரணில் சாய்ந்து கொண்டாலு அவரது மனமும் உதடும் குலதெய்வமான முத்தமாரியை வேண்டிக்கொண்டிருந்தது. ஆம்மாளாச்சி ஒரு விக்கினமுமில்லாம பெத்துப்போடோணும் தாயே நீதானம்மா எல்லாத்துக்கும். என்றவர் ஏதோ நினைவு வந்தவராக ஓடிப்போய் உரிக்காத தேங்காயொன்றை எடுத்து நேர்ந்து கூரையின்மேல் வைத்தார்.
வலியில் கண்கள் சொருகி உறக்கம் வந்தது சாந்திக்கு. ஒருகணம்தான் மறுபடிதுடித்து நிமிர்ந்தவள் ‘ம்….ங்;;க்;;;ஐயோ இனி ஏலாதணை நான் என்னால ஏலயில்லை…’ அழுதவாறே தானாகவே போய் படுக்கையில் சாய்ந்தாள். சின்னப்பிள்ளையக்கா சொல்லாமலே சேலையை கழற்றி உதறிக்கொண்டே துடித்தாள் முழங்கால்களை உயர்த்தி பாதத்தைக்குத்தி மல்லாந்து படுத்தவளை ;சின்ப்பிள்ளையக்கா குறியைப்பார்த்தார்

வெள்ளையாய் குமிழ்கட்டிவாசலுக்குமிக கிட்டவாக ஒரு இளநீர் வழுக்கைபோல பன்னீர்குடம் தெரிந்தது. ‘ம்…பயப்பிடாத இன்னம் கொஞ்ச நேரந்தான் குத்துவந்தா முக்கு’அவள் லேசாக முக்க ஆரம்பிக்கும்போதே மலவாசல் வழியாக சிறிதுசிறிதாக மலம் வெளித்தள்ளியது பழநதுணியைப் போட்டு அதைத் துடைத்து அபபுறமாகத் தள்ளினாள்சின்னப்பிள்ளையக்கா…
கைகளை உதறிக்கொண்ட தலையை உதறிஉதறி துடித்தாள் சாந்தி ‘முடியாது முடியாது’
‘ பிள்ளை ஏலும் இஞ்ச கையக்கொண்டா ‘என கையைப்பிடித்து கீழே கெண்டைக்காலுக்குக் கீழே குதிக்காலுக்கு மேலே ‘ பிடி இதில ‘ மௌ;ளத்தலையத் தூக்கி வயித்தப்பாத்து முக்கு’
சின்னப்பிள்ளையக்கா முட்டையாகத்தள்ளிய பன்னீரகுட வாயிலைத்தன் ஆட்காட்டி விரலால் தள்ள சளாரென உடைந்து வெளியே பீறிப் பாய்ந்தது சூதக நீர்;. அந்த வளவளப்பு அடங்குமுன் முக்கு என்றாள்செல்லம்மாவும் உரப்பினாள் முக்கு முக்கு என்றபோது…., வலி நின்றுவிட்டது.

‘சரிஞசு படு பிள்ளை’ என்றாள் சின்னப்பிள்ளையக்கா. செல்லம்மாக்கா சுடுதண்ணிய எரியவிடணை.இந்த கத்தரிக்கோலையும் திரிச்சநூலையும் தண்ணிக்க போட்டுவிடு’
சுhந்தி அமைதியாகப் படுத்திருந்தாள்.தண்ணியடுப்பை எரி;யவிட்ட செல்லம்மாக்கிழவிமீண்டும் வெற்றிலை இடிக்கத்தொடங்கியது.
நேரம் பத்துமணிக்க மேலயாகுது வீரகத்திக்கும் ஏதும் தண்ணிய வெந்நியக்குடு. புpள்ளைக்கும் எப்பன் தேத்தண்;ணியப்பாலக் கொண்டாணை களைச்சுப் போனாள்’ என்றஇ சின்னப்பிள்ளையக்கா வீரகத்தி மணிக்கூடு ஓழுங்குபண்ணினநீயே ‘ என்றுகேட்டாள்
‘ஓமக்கா போஸ்ற் மாஸ்டரட்ட மணிக்கூடு வாங்ககிக் கொணந்தனான்..இப்ப…பத்து அஞ்சுநிமிசம்’
திடீரெனத்துடித்தெழும்பிய சாந்து ங்க்ங்h…ம்…க்க்க்கா அய்யோஅய்யோ எனப்பாய்ந் சின்னப்பிள்ளையக்காவின் தோளில் படீர் படீரென அடித்தாள். மறுபடி அவளது கையை உர்ய இடத்தில்விட்டுப்’ பிடி’ என்றவள் ‘முக்கு’ என்று கூவினாள். ‘அக்க்க்காய்ய்ய்க்க்ம்ம்ம்க்க்க்’அவள்வீராவேசமாகத் தள்ள, தலை வாசலில் முட்ட மேற்புறமாக தலையை முன்நோக்கி நகர்த்த சுழி வெளியே குபீரெனத ;தள்ளியதும் ‘போதும் முக்காத’ நெற்றியிலும் பிடரியிலுமாக கையைவைத்து லேசாக இழுக்க களகளவென நீரும் தீட்டுமாக குழந்தை வெளியே வந்தது தான்.பெரிய குரலெடுத்து விர்ரா….விர்ரா…;கத்த வாரம்பித்தது களகளவெனத்தன்உடலிலிருந்து வெளியேறிய பாரம் அவள்கண்களுக்கு;தெரியாவிட்டாலும் வெதுவெதுப்பாக தொடைகளையும் பிட்டத்தையும் நனைத்த பத்துமாதம் அவள்சுமந்த நீர் அரைமயக்கநிலையை ஏற்படுத்தியது ஒரு இளைப்பாறல்போல கண்கள் சொருகின. ஏற்கெனவே கொதிநீரில் கிடந்த நூலையும் கத்தரிக்கோலையும்’செல்லம்மா கொடுக்க தொப்புள் கொடியை வெட்டி தாயையும்சேயையும் வேறாக்கினாள் சின்னப்பிள்ளையக்கா.
தலையணையை இழுத்துதலையைக் கீழே விட்டவள் ‘கொஞ்சம் தண்ணிபருக்கெணை’ செலலம்மா தண்ணீர் பருக்கவும் நஞ்சுக்கொடி வெளியேறவும் சரியாகவிருந்தது.
‘வீரகத்தி பத்து அம்பது .பேரன்பிறந்திருக்கிறான்.’
அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் குழந்தையையைத்தூக்கி வீரகத்திக்கும் சாந்திக்கும் காட்டினாள்.
‘இவர் வரேல்லயே’ சாந்தி கேட்டாள்;
‘.இல்லப்பிள்ள சொல்லி விட்டிருக்கு விடிய வந்திருவான்.’
வீரகத்தியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
காலையில் சின்னவன் வந்தபோது செல்லம்மாக்கிழவி கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தது. கால்களின் மேல் பிஞ்சுக் கை ககால்களை உதைத்தவண்ணம் சின்னவனுடைய பிரதியாக குழந்தை கிடந்தான்..அவனது கண்களில்ஆனந்தக்கண்ணீர். ஏட்டி சாந்தியைப்பார்த்தான்.அவள்சிரித்தபடி அவனை வரவேற்றாள்.
தான் அவளுக்கு கொடுத்துப் பெற்ற இன்பத்தை இப்படித் திரட்டித் தந்திருக்கிறாளே.என்ற வியப்பு அவனுக்கு.அதற்காக அவள் பட்ட துன்பமெதுவும் அவனுக்குத்தெரியாது. தெரியவே தெரியாது.