Breaking News

இலங்கை நீதித்துறை வரலாற்றில் தமிழ் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் (முழுமையான விபரங்கள்)

இலங்கையின், 44 வது பிரதம நீதியரசராக நீதியரசர் கே.ஸ்ரீபவன் நேற்று சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் நேற்று மாலை சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை நீதித் துறை வரலாற்றில் இப்பதவியை வகிக்கவுள்ள இரண்டாவது தமிழராகவும் கே.ஸ்ரீபவன் பதிவாகியுள்ளார்.இதற்கு முன்னர் சுப்பையா சர்வானந்தா 1984- 1988 காலப்பகுதியில் இப்பதவியை வகித்துள்ளார்.


சிரேஷ்ட நீதியரசர் கே.ஸ்ரீபவன் ஒரு பார்வை.

முழு பெயர் - கனகசபாபதி சிறீபவன்

பிறப்பு: 29 பெப்ரவரி 1952

தந்தை - நடராஜா கனகசபாபதி

கல்வி - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

இலங்கை சட்டக் கல்லூரி,

கொழும்பு பல்கலைக்கழகம்

லண்டன் பல்கலைக்கழகம்

1952 பெப்பிரவரி மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி கற்றார்.ஷ,1978 ஆம் ஆண்டு பதில் அரச சட்டத்தரணியாக செயற்பட்ட அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார்,1992 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்தில், அவர் வர்த்தக கற்கை நெறி பட்;டத்தை பெற்று கொண்டார்.

2002 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்ட கே.ஸ்ரீபவன் 2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்,2013 ஆம் ஆண்டு பதில் பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015- இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.இதுமட்டுமன்றி முன்னாள் பிரதம நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் மொஹான் பீரிஸ் சர்ச்சைக்கு பின்னர் பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன்பதவியேற்றுள்ளார்.

மேலும் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் இப்பதவியை சிறுபான்மையினத்தவர் ஒருவர் ஏற்றுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இலங்கை நீதித்துறையும், தமிழர்களும்


இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. இத்துறைக்கு தமிழர்கள் ஆற்றிய பங்கு மறுக்க முடியாத ஒன்றாகும்.
இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக உயர் பொறுப்பொன்றுக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழராக செல்லப்பா நாகலிங்கம்கருதப்படுகின்றார்.

செல்லப்பா நாகலிங்கம்

இலங்கை நீதித்துறையில் முதல் தடவையாக உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்ட தமிழர் இவர் ஆவார். 1947 ஆம் ஆண்டில் இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார் .

பின்னர் உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதியாகவும் இவர் நியமிக்கப்படார். அதுமட்டுமன்றி அக்காலப்பகுதியில் பதில் பிரதம நீதியரசராக செல்லப்பா நாகலிங்கம்பல தடவைகளில் நியமிக்கப்பட்டுள்ளார்.இவற்றுக்கும் மேலதிகமாக இவர் இலங்கையின் பதில் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

சுப்பையா சர்வானந்தா


இலங்கை நீதித்துறையில் உயர் பதவியாக க் கருதப்படும் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர் இவர் ஆவார்.இவர் 1974 ஆம் ஆண்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 1984 ஆம் ஆண்டில் அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர். இனால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். இதுதவிர ஜே.ஆர். இவரை மேல் மாகாணத்தின் முதலாவது ஆளுநராக நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர சிவா செல்லையா, வீரவாகு சிவசுப்ரமணியம் , பொன்னுத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா, ஹென்ரி தம்பையா, வின்செட் தாமோதரம் , தெள்ளிப்பளை ராஜரத்தினம் , தேசமான்ய பத்மநாதன் ராமநாதன், கிருஷ்ணபிள்ளை பாலகிட்டுணர், நமசிவாயம் நடராஜா , மாணிக்கவாசகர் வைத்தலிங்கம் , தந்தை செல்வாஎன அழைக்கப்படும் வேலுப்பிள்ளை செல்வநாயகம் , தற்போதைய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் என இப்பட்டியல் மிகப் பெரியது.

இலங்கையின் நீதித்துறைக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ள தமிழர்களின் வரிசையில் மிக முக்கியமானதொரு பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதம நீதியரசர் ஸ்ரீபவனின் மீது தற்போது முழு உலகின் பார்வையும் திரும்பியுள்ளது.

இதுதவிர தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள கே.ஸ்ரீபவன்முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.