பசிலை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு (2ம் இணைப்பு)
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க ஆகியோர் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திவி நெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்டிருந்த பசில் ராஜபக்ஸ, கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பசில் கடுவெல நீதவானிடம் அழைத்துச் செல்லப்பட்டார் (காணொளி இணைப்பு)
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க,திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க ஆகியோர், பாரிய நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து சற்று முன்னர் கடுவெல நீதவானிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதிமோசடி குறித்து அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரிடம் இன்று முற்பகல் 11 மணி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சுமார் 7 மணித்தியால விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.








