Breaking News

தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் இலங்கைக்கான நோர்வேயின், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

லண்டனில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற, இலங்கையில் நோர்வேயின் அமைதி முயற்சிகளை வெளிப்படுத்தும் நூல் வெளியீட்டு விழாவில், பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் உள்ள தமிழர்கள் களத்திலும், புலத்திலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவே தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தமிழர்களின் அரசியல் உரிமைகளை சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவது கிடையாது.

இலங்கையில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே வாக்களித்துள்ளனர். தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தே ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது.புதிய அரசாங்கம் நேர்த்தியான வழியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட அனைத்துலக சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“உள்நாட்டுப் போர் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவர, இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி” என்ற இந்த நூல், இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பங்கு குறித்து விபரிக்கிறது.

இந்த நூலை, இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவராகப் பணிபுரிந்த எரிக் சொல்ஹெய்ம், மற்றும், சிறிலங்காவில் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வேயின் முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கீசன், ஆகியோரின் பங்களிப்புடன், மார்க் சோல்டர் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.