Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 09

சிவம் மருத்துவப் பிரிவு முகாமைச் சென்றடைந்தபோது அதன் பொறுப்பாளரான மருத்துவப் போராளி நிமலன் வாசலில் நின்றிருந்தான்.


“என்ன நிமலன் – கணேஸ் பாடு எப்பிடியிருக்குது?; எனக் கேட்டான் சிவம். எந்த நெருக்கடி நேரத்திலும் நிமலன் சிரித்த முகத்துடனேயே பணியாற்றுவான்.

அன்று அவனின் முகம் சற்று வாட்டமடைந்திருப்பதைச் சிவம் அவதானிக்கத் தவறவில்லை.

நிமலன் நேரடியாக எந்தப் பதிலையும் கூறாமல்; ரூபாக்கா வந்திட்டா. அவ தான் அங்க பக்கத்தில நிக்கிறா” என்றான்.

சிவம் கணேஸ் படுத்திருக்கும் அறையை நோக்கிப் போனான். கணேசுக்கு இன்னும் செயற்கைச் சுவாசம் ஏற்றப்பட்டுக்கொண்டேயிருந்தது.

எனினும் அப்போது அவன் விழிப்பு நிலையிலேயெ இருந்தான்.

ரூபா அவனைக் கண்டதும், “வாங்கோ.. இப்ப தான் கன நேரத்துக்குப் பிறகு முழிச்சவர்”, என்றாள்.

அந்த நிலையிலும் கணேசின் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. சிவம் மெல்ல அவனின் தலையை வருடிவிட்டான். அந்த வருடலில் ஏதோ ஒரு வித சுகம் இருந்திருக்க வேண்டும். கணேஸ் கண்களை மெல்ல மூடிவிட்டு மறுபடியும் திறந்தான்.

மூச்சை அவன் சற்றுப் பலமாக இழுத்ததால் நெஞ்சு ஒரு முறை தாழ்ந்து பிறகு மேலெழுந்தது. அதை அவதானித்த சிவம் ஒரு கையை அவனின் நெஞ்சில் வைத்து தடவினான். கணேஸ் சிரமப்பட்டு தனது வலது கையைத் தூக்கி நெஞ்சில் கிடந்த சிவத்தின் கையை மெல்ல பிடித்துக் கொண்டான். பின்பு தனது இடது கையை ரூபாவை நோக்கி உயர்த்த ரூபா அந்தக் கையை பற்றிக் கொண்டாள்.

அவன் இருவரின் கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூட அவனின் கண்களில் நீர் வடிந்தது. சிவம் மெல்லக் கையை எடுக்க முயன்ற போது கணேசின் பிடி இறுகவே அவன் அந்த முயற்சியைக் கைவிட்டான். ரூபாவுக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கவேண்டும்.அவள் ஒதுவித மிரட்சியுடன் சிவத்தை நோக்கிவிட்டு கணேசின் முகத்தைப் பார்த்தாள்.

இப்போ கணேசின் கண்கள் திறந்தன. அவனின் முகத்தில் ஒருவித புன்னகை இழையோடியது. கணேசின் செய்கைகளின் அர்த்தத்தை இருவருமே புரிந்துகொண்ட போதிலும் அவர்கள் உடனடியாக மறுப்புக் கூறி அந்த நிலையில் அவனின் மனதை நோகடிக்க விரும்பவில்லை.

கணேசின் பிடி சற்று தளரவே இருவரும் தங்கள் கைகளை விடுவித்துக் கொண்டனர்.

அங்கு வந்த நிமலன், “அண்ணை! அவர் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேணும்”, என்றான்.இருவரும் கணேசைப் பார்த்தனர்.அவன் விழிகளில் மலர்ந்த ஒரு புன்னகையால் விடை கொடுத்தான்.

இருவரும் வெளியே வந்த பின்பு, ரூபா..“சிவம்…”, என அழைத்தாள்.

சிவம் நின்று திரும்பி அவளைப் பார்த்தான். “கணேஸ்.. என்ன சொன்னவர் எண்டு விளங்கினதே?”

கணேஸ் சில விநாடிகள் அமைதியின் பின், “ஓ.. நல்லாய் விளங்கினது.. அதை என்னட்ட நேரிலையும் கேட்டிருக்கிறான். ஆனால்..”

“ஆனால்…?” “நான் அதை ஏற்றுக்கொள்ளேல்ல”!

ரூபா “ஓமோம் நானும் ஏற்கேல்ல. அதைப் பற்றி யோசிக்கவே போறதில்லை. அப்பிடியான தேவையும் வராது” என்றாள்.

“நிச்சயமாய்.. அவனுக்கு எந்த ஆபத்துமே வராது”, என்றான் சிவம். அவனின் குரலில் அசைக்க முடியாத உறுதி தொனித்தது. முன்னால் நின்ற பாலை மரத்தில் இரு குருவிகள் அருகருகேயிருந்து தங்கள் மொழிகளில் பேசிக் கொண்டிருப்பது ரூபாவின் கண்களில் பட்டது.

அவள் ஒரு பெருமூச்சுடன்..“போராளிகளான எங்களுக்கு எப்பவும் சாவு வரலாம் எண்டு தெரிஞ்சு தான் காதலிக்கிறம் எண்டாலும் கூட..” எனக் கூறிவிட்டு இடைநிறுத்தினாள்.

“ஏன்.. இப்ப நீங்கள் சாவைக் கண்டு பயப்பிடுறியளே?” “இல்லை.. இல்லை.. எனக்குச் சாவு வந்தால் அதைப் பெருமையோட ஏற்றுக்கொள்ளுவன். ஆனால் நான் காதலிக்கிறவருக்கும் சாவு வருமெண்டால்….”, முடிக்கப்படாத அவளின் வார்த்தைகளில் ஒரு ஏக்கம் விரவிக்கிடந்தது.

சிவம் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்,

“அவனுக்கு ஏதாவது விபரீதமாய் நடந்தால் என்னாலேயே தாங்க முடியாது.. அப்பிடியிருக்க உங்கடை நிலைமை எப்பிடி இருக்கும் எண்டு என்னால புரிஞ்சுகொள்ள முடியுது”

“இல்லை. அவர் ஒரு வீரன்.. மரணம் அவரை வெற்றி கொள்ள முடியாது” என்றாள் ரூபா அழுத்தமான குரலில்.

“ஓமோம்.. அவன்ரை மன உறுதி அசைக்கப்பட முடியாதது”, என்றான் கணேஸ். அவர்கள் கதைத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென மருத்துவப்பிரிவு முகாம் பரபரப்படைந்தது.

சில போராளிகள் அங்குமிங்கும் ஓடி ஏதோ அவசர பணிகளில் ஈடபடத் தொடங்கினர். அம்புலன்ஸ் வண்டியொன்று அவசரமாக புறப்பட்டு வேகமாக வெளியே சென்றது. அப்போது அங்கு வந்த நிமலனிடம், “என்ன நிமலன் ஏதும் பிரச்சினையே?”, எனக் கேட்டான்.

“ஓமண்ணை.. கிளைமோர் வைச்சிட்டாங்களாம்.. மோட்டர் சைக்கிளில வந்த ஒரு ரீச்சரும் புருஷனும் அகப்பட்டிட்டினமாம்”

“எங்கை எங்கை நடந்தது?” எனத் தவிப்புடன் கேட்டான் சிவம். “பரப்புக்கடந்தான் றோட்டிலையாம்” சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி மடு – பரப்புக்கடந்தான் வீதியில் கிளைமோர் வைத்ததென்றால் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பலவீனப்பட்டிருப்பதாகவே சிவத்துக்குத் தோன்றியது.

அது அவனுள் ஒருவித கோபத்தையும் ஏற்படுத்தியது.

“அவளவு தூரம் அவங்கள் வரும் வரைக்கும் எங்கட முறியடிப்பு ரீம் என்ன செய்ததாம்?”

“அண்ணை.. இந்த மடுக்காடு அவங்களுக்கு நல்ல வசதி தானே.. வில்பத்து வரையும் நீளுது. எங்கடை போராளியளின்ரை கண்ணில மண்ணைத் தூவிப்போட்டு வாறது அவனுக்கு அவ்வளவு கஷ்டமில்லை, என்றான் நிமலன் சற்று அமைதியாக. சிவமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

“எங்களோட நிண்டிட்டு துரோகியளாய் மாறின கொஞ்சப் பேரும் இப்ப அவங்களோட நிக்கிறாங்கள்.. அவங்கள் வடிவாய் பாதை காட்டுவாங்கள் தானே?”

“அந்தத் துரோகியள் மட்டும் என்ரை கையில அகப்பட்டால்..”என்றுவிட்டு பல்லை நெருமினான் நிமலன்.

“சரி.. சரி.. ஆக்கள் பாடு என்னமாதிரி?” “கிளைமோர் எண்டால் தெரியும் தானே.. இப்ப விபரம் தெரியேல்ல.. மெடிக்கல் ரீமை அனுப்பீட்டன். இனி வந்திடும்”, என்றான் நிமலன்.

“சரி சரி.. நான் பேசுக்குப் போறன்”

“ஓம்.. சிவம். நீங்கள் போங்கோ.. நான் இஞ்சை தான் நிப்பன்.” என்றாள் ரூபா.

“கணேஸ் தேடுவான்.. பக்கத்திலேயே நில்லுங்கோ..” என்றுவிட்டு ரூபாவிடம் விடைபெற்றான் சிவம்.

சிவம் தங்கள் முகாமைச் சென்றடைந்ததும் முழு விபரங்களையும் அறிய முடிந்தது. ஆசிரியையும், அவரின் கணவரும் மோட்டார் சைக்கிளில் அடம்பனில் இருந்து மடு நோக்கி வந்ததாகவும், பரப்புக் கடந்தானுக்கும் மடுவுக்கும் இடையிலான அடர்ந்த காட்டுப் பகுதி வீதியில் கிளைமோர் தாக்குதலில் அகப்பட்டதாகவும் தெரிந்து கொண்டான்.

ஆசிரியை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவரின் கணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் போது மரணமடைந்துவிட்டார்.

நேராக தளபதியிடம் சென்ற அவன், அவர் வோக்கியில் யாருடனோ கதைப்பதைக் கண்டு வெளியே நின்று கொண்டான். சிறிது நேரத்தில் அவர், “சிவம், உள்ளை வாங்கோ” என அழைத்தார்.

சிவம், “என்னண்ணை சனத்தைக் கொல்லுறாங்கள்”, என்றான்.

அவன் வார்த்தைகளில் ஒருவித ஆவேசம் இளையோடியது. “ம்.. எங்கட வாகனங்களுக்கு வைச்சாங்கள். புதூருக்கை வைச்சு இரண்டு பேரை அமத்தினதோட ஓய்ஞ்சு கிடந்துது, இப்ப பிறகு சனத்திலை துவங்கீட்டாங்கள்”, என்றார் தளபதி.

“நாங்கள் ஏதாவது அடுத்த ஏற்பாடு செய்யத்தானே வேணும்..” “பின்னை.. இவங்கள் எங்கடை சனத்தை அழிக்க விடலாமே?”

“அப்ப.. என்ன செய்வம்?” “பிளான் ஒண்டு போட்டிருக்கிறன். இரவைக்கு அண்ணையோட கதைச்சு அனுமதி எடுத்துப் போட்டு நடத்திவிட வேண்டியதுதான்” அவரின் வார்த்தைகள் தனக்கொரு பெரிய வேட்டைக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிவத்துக்கு ஏற்படுத்தின.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)