Breaking News

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிக் களத்தில் கூட்டு எதிர்க்கட்சி

புத்தாண்டில் அரசாங்கத்தை கவிழ்க்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்த நோக்கத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமையில் விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட திருத்தங்கள் பாரியளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.இன்னும், திருத்தங்களை மேற்கொள்வது எவ்வாறு துண்டு விழும் தொகையை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்படும்.

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது நியாயமானது என்பது ஆளும் கட்சியின் ஒரு சிலராலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் 300 மில்லியன் ரூபாவினை வர்த்தகர் ஒருவருக்கு வழங்க எடுத்த முயற்சி ஜனாதிபதியினால் நிறுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சரியானது என்பதும் புலனாகியுள்ளது.ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதம் செய்வது குறித்த திகதி நிர்ணயம் பற்றி அடுத்த கட்சித்தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் ஆளும் கட்சியின் ஒரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இரகசியமான முறையில் நடத்தப்பட வேண்டுமென கோரப்பட உள்ளதாகவும் ரஞ்சித் சொய்சா ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.