Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 30

போராளிகளைப் பொறுத்தவரையில் களநிலை முன்னெப்பொழுதையும் விட மிகவும் நெருக்கடி மிக்கதாகவே அமைந்திருந்தன. முள்ளிக்குளம், பெரியபண்டிவிரிச்சான்,
பரப்புக்கடந்தான், அடம்பன் என நாலுபக்கங்களிலும் பெரும் இராணுவப் படையணிகள் இறக்கிவிடப்பட்டிருந்தன.

எறிகணைகள் மழை போல் பொழிந்து கொண்டிருந்தன. குறிப்பாக எறிகணைகள் போராளிகளின் விநியோகப் பாதைகளில் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தன.

கிபிர் விமானங்களும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதல்கள் மத்தியிலும் அடிக்கடி வந்து குண்டுகளைத் தள்ளிக் கொண்டிருந்தன. எங்கும் பெரும் கரும்புகை மண்டலங்கள் எழுந்து கொண்டிருந்தன. சிவம் படையினரை ஒரு அங்குலம் கூட முன்னேற விடுவதில்லை என்ற உறுதியுடன் தனது அணியை வழிநடத்திக்கொண்டிருந்தான்.

பெண்கள் அணியினரும் சிவத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப மூர்க்கமாகப் போராடிக்கொண்டிருந்தனர். கட்டளை பீடத்திலிருந்து கட்டகளைகளும் தகவல்களும் வந்து கொண்டிருந்தன. காலை பத்து மணிவரை நிலைமை போராளிகள் பக்கம் சாதகமாகவே இருந்தது.

வீரச்சாவடைவோர், காயமடைவோரின் எண்ணிக்கை ஒன்று இரண்டிலிருந்து பத்து பதினைந்து என அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. சிவம் இயன்றவரை பாதுகாப்பாகப் போரிடும் படி போராளிகளுக்குக் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தான். முன்பெல்லாம் படையினர் பத்து பதினைந்து பேர் மரணமடைந்துவிட்டாலோ காயப்பட்டுவிட்டாலோ பின்வாங்கி விடுவதுண்டு. அன்று இறந்தவர்களின் உடலைக் குறுக்கே போட்டு அதன் பின்னால் படுத்துக்கொண்டு சுட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தலையை இலக்குவைத்துப் பாயும் போராளிகளின் ரவைகள் அவர்களின் தலைக் கவசங்களில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. எனினும் போராளிகளின் சூடுகள் அவர்களின் இறப்பையும் அதிகரிக்கத்தான் செய்தன. காலை பதினொரு மணியளவில் படையினரின் தாக்குதல் எதிர்பாராத விதமாகத் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது.

எதிர்த்திசையில் ஒரு படையினனைக் கூடக் காண முடியவில்லை. எறிகணை வீச்சுக்களும் விமானத் தாக்குதல்களும் கூட நிறுத்தப்பட்டுவிட்டன. எனினும் சிவம் தனது அணியினரை மிகவும் விழிப்புடனிருக்கும்படி கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். முள்ளிக்குளத்தில் பெரும் படையணி குவிக்கப்படுவதாகவும் அந்தப் பக்கம் பிரதான களமாக மாறலாம் எனவும் பெரிய பண்டிவிரிச்சானிலும் பரப்புக்கடந்தானிலும் படையினர் திசை திருப்பும் சண்டைகளில் ஈடுபடலாம் எனவும் கட்டளை பீடத்திலிருந்து அறிவித்தல் வந்தது.

சிவம் தனது அணியில் ஒரு பகுதியை முள்ளிக்குளம் களமுனைக்கு அனுப்புவதற்கு அனுமதி கேட்ட போது அது மறுக்கப்பட்டுவிட்டது. மாறாக பெண்கள் பிரிவில் கீதாவின் அணியை அனுப்பும்படி கட்டளை வந்தது. கீதாவும் ஆனையிறவுச் சமரின் போது கட்டத்தீவுப் பக்கத்தால் உள்ளிறங்கிய அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றிருந்தவள்.

பல சண்டைகளில் சாதனை ஈடுட்டி தலைவரின் விருதையும் பெற்றவள். ஆனால் காடுகளும் முட்புதர்களும் நிறைந்த முள்ளிக்குளம், கீரிசுட்டான் களமுனைக்கு அவள் பொருத்தமானவளா என்பது சிவத்திடம் கேள்வியாகவே எழுந்து நின்றது.

எனினும் தலைமையின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால் அவளின் அணியை உடனடியாகவே அனுப்பிவைத்தான். அதேவேளையில் எல்லாக் களமுனைகளிலும் தான் நிற்க வேண்டும் என்ற தனது பேராசையும் நியாயமற்றது என்பதைப் புரிந்து கொண்டான்.

கட்டளை பீடத்தின் வியுகங்கள் எப்போதும் நன்கு திட்டமிட்ட வகையிலேயே அமைந்திருக்கும் என்பதில் அவனுக்கு எப்போதுமே நம்பிக்கையுண்டு. சண்டை ஓய்ந்திருந்த வேளையில் மலையவன் சிவத்திடம் வந்தான். அவனின் தோளில் ஒரு சிறுகாயம் பட்டிருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் அதற்கு மருந்திட்டு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டான்.

அன்று அவன் பல படையினரைக் கொன்று குவித்த மகிழ்ச்சி அவனின் முகத்தில் தெரிந்தது.

“என்ன.. மலையவன்.. இண்டைக்கு விளாசி எறிஞ்சிருக்கிறியள் போல..” எனக் கேட்டான் சிவம். “பின்னை.. என்ரை தங்கச்சியை என்னைக் கொண்டே சுட வைச்சவங்களை..”, என்றுவிட்டு வசனத்தை முடிக்காமலேயே பல்லை நெருமினான் மலையவன். “உன்ரை கோபம் நியாயமானது. ஆனால் நாங்கள் போராளிகள். நாங்கள் தனிப்பட்ட கோபங்களுக்காகப் பழிவாங்கிறதில்லை.

வதனிக்கு நடந்தது எங்கடை இனத்துக்கு நடத்தப்படுற கொடுமையின்ரை ஒரு பகுதி தான். ஒட்டு மொத்தக் கொடுமைகளையும் இல்லாமல் செய்யத் தான் எங்கட போராட்டம்” “ஓமண்ணை.. அது சரிதான்..”, என மலையவனும் ஆமோதித்தான்.

அவனும் ஏற்கனவே அதை உணர்ந்திருந்தான். ஆனால் வதனியின் வீரச்சாவை எண்ணும் போது அவனால் கொதிப்படையாமல் இருக்க முடியவில்லை.

“டேய்.. மலையாண்டியண்ணா”, என்ற அவளின் அழைப்பு அடிக்கடி அவனின் காதில் கேட்டுக்கொண்டேயிருந்தது. “சரி.. சாப்பிட்டீங்களே?”, எனக் கேட்டான் சிவம். “ஓமண்ணை.. இப்பதான்.. அவிச்ச கடலை கொண்டு வந்தாங்கள். ஒரு மாதிரிச் சாப்பிட்டம்”, என்றான் மலையவன் சிரித்தவாறே.

“அவங்களும் என்ன தான் செய்றது.. வாற வழியெல்லாம் ஒரே செல்லடி”, என்றான் சிவம். அப்போதுதான் தான் சாப்பிடவில்லை என்ற ஞாபகம் சிவத்துக்கு வந்தது. சாப்பாடு வைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியை நோக்கிப் போனான் அவன். செல்லடியும் கிபிரடியும் முடிந்து சிறிது நேரத்திலேயே பெரிய மடுவில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் அவ்விடத்தை விட்டுப் புறப்பட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த அகலம் குறைந்த சிறு வீதி மக்களால் நிறைந்துவிட்டது. எங்கு போகிறோம் என்ற முடிவு நகர்ந்து கொண்டிருந்த எந்த ஒரு மக்களிடமும் இருக்கவில்லை. அவர்கள் நினைவில் நின்றதெல்லாம் குளத்தின் அலைகரையில் விழுந்த விமானக் குண்டும் உடல் சிதறிச் செத்துப் போயிருந்த மாடுகளும் தான்.

அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்த போது பாதுகாப்பான பதுங்குகுழிகளை அமைத்திருந்தனர். ஒரு சில நாட்களில் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிவிட முடியும் என்ற நம்பிக்கையில் எவரும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

கிபிர் விமானம் குண்டுகளைத் தள்ளிய போதெல்லாம் பிள்ளையாரையும் மடுமாதாவையும் அலறி அழைத்தவாறே நிலத்தில் விழுந்து படுப்பதைவிட வேறு வழியிருக்கவில்லை. ஊருக்குள் குண்டு எதுவும் விழாத போதிலும் கூட அவர்களால் அச்சமடையாமல் இருக்க முடியவில்லை.

சோர்ந்து போன மனதுடனும், தளர்வடைந்த உடலுடனும் முருகேசர் பரமசிவத்திடம் வந்தார். “பரமசிவம் சனமெல்லாம் வெளிக்கிடுது.. நாங்கள் என்ன செய்யிறது?” “எல்லாச் சனமும் வெளிக்கிட நாங்கள் மட்டும் இஞ்சையிருந்து என்ன செய்யிறது.. போக வேண்டியது தான்”, என்றார் பரமசிவம் ஒரு நீண்ட பெருமூச்சுடன்.

“எங்கை போறது?”, எனக் கேட்டார் முருகேசர். “எங்கை போறது.. உப்பிடியே பள்ளமடு, இலுப்பைக்கடவை, பாலியாறு எண்டு போவம்.. ஒரு வசதியான இடம் பாத்து கொட்டில் போடுவம்” உண்மையிலேயே எங்கு போவது என்பது தொடர்பாக பரமசிவத்துக்கும் குழப்பமாகவே இருந்தது.

வீட்டில் விட்டு வந்த நெல்லுமூடை, மிளகாய் மூடை பற்றி நினைப்பதையே அவர் விட்டுவிட்டார். ஆனால் வண்டிலில் இருக்கும் நெல்லு மூடை எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் என்ற கேள்வி எழுந்து அவரை குழப்பத் தவறவில்லை. நேரடியாகவே பாலியாற்றங்கரைக்குப் போய் அங்கு ஒரு கொட்டிலைப் போடுவதாக முடிவு செய்தார்.

பாலம்பிட்டிக்குத் திரும்பும்வரை ஏதாவது பயிர்வகைகளைச் செய்து காலம் தள்ளிவிட முடியும் என அவர் நம்பினார். பரமசிவம், முருகர், சுந்தரம் ஆகியோர் கொட்டில்களைக் கழற்றி வண்டிலில் ஏற்றினர். அவர்கள் ஏனைய பொருட்களையும் எடுத்துப் பசளைப் பைகளில் கட்டிக்கொண்டிருக்கும் போதே பார்வதியும் வேலாயியும் நெல்லை குற்றி உலையில் போட்டுக் கஞ்சிகாய்ச்சி விட்டனர். எல்லாப் பொருட்களையும் ஏற்றி முடித்த பின்பு, பார்வதி தேங்காய் துருவிய சிரட்டைகளில் கஞ்சியை விட்டு எல்லோருக்கும் கொடுத்தாள்.

பரமசிவம் இரவு எஞ்சியிருந்த சிறிதளவு சோற்றைக் கரைத்து ஒரு வாடிப்போன பிஞ்சு மிளகாயைக் கடித்துக் கொண்டு குடித்தார். பெருமாளுக்கு மெல்லிய இழுப்பு ஆரம்பித்துவிட்டதால் அவரால் கஞ்சியைக் குடிக்க முடியவில்லை. பார்வதி வலியுறுத்தி அவரை குடிக்க வைத்துவிட்டாள். பெருமாளையும் முருகேசரையும் பொருட்களுடன் வண்டிலில் ஏற்றிவிட்டு பரமசிவம் ஏறி சாரதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

ஏனையோர் நடையில் பின் தொடர வண்டி புறப்பட்டது. அவர்கள் தங்களின் அந்த இரண்டாவது இடப்பெயர்வை ஆரம்பித்த போது கிட்டத்தட்ட பெரியமடு என்ற அந்த ஊரே காலியாகவிட்டிருந்தது. மாட்டுப்பட்டிகள் கூட வெறிச்சோடிப் போயிருந்தன. பெரியமடுவிலிருந்து பள்ளமடுவரை சனக்கூட்டத்தால் வீதி நிரம்பிவழிந்தது. பல ஊர்களைச் சேர்ந்த பல ஆயிரம் குடும்பங்கள் அந்தச் சிறிய மண் வீதி வழியாக மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தன.

உழவுயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்கள் என மண்ணெய்யில் ஓடும் வாகனங்கள் கூட மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தன. எனினும் சைக்கிள்களில் பெரும் மூட்டைகளைக் கட்டியவாறும் கால் நடையில் தலைச்சுமைகளுடனுமே பெரும்பாலானோர் பயணித்துக்கொண்டிருந்தனர். எல்லோருமே தங்கள் தோள்களில் ஒரு பெரும் தோல்வியைச் சுமந்து செல்வதாகவே கருதி வேதனைப் பட்டுக் கொண்டு நடந்தனர்.

ஆனாலும் வெகுவிரைவில் தாங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் அவர்கள் எள்ளளவு கூட இழந்துவிடவில்லை. கொளுத்தும் வெயிலும் காலுக்குக் கீழ் தகிக்கும் மண்ணும் தாங்க முடியாத தண்ணீர் தாகமும் வாட்டியெடுக்க அவர்கள் நடந்துகொண்டிருந்தனர்.

அந்த சனத்திரளின் மத்தியில் வண்டியைச் செலுத்துவது பரமசிவத்துக்கு ஒரு இலகுவான காரியமாகப்படவில்லை. ஒரு நிழலில் ஓரமாக வண்டியை நிறுத்தினார். பரமசிவம் முருகரிடம், “கொஞ்சம் சனம் குறையட்டும்.. பிறகு வெளிக்கிடுவம்”, என்றுவிட்டு வண்டியை முன் தாங்கியில் நிறுத்திவிட்டு மாட்டை அவிழ்த்து ஒரு ஓரமாகக் கட்டினார். அனைவரும் போய் ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டனர். பெருமாள் அப்படியே வெறும் நிலத்தில் படுத்துவிட்டதை அவதானித்த வேலாயி ஒரு பழைய சாரத்தைக் கொண்டு போய் விரித்துவிட்டாள்.

திடீரென வானத்தில் தோன்றிய கிபிர் வேகமாகத் தாழ்வாக வர ஆரம்பித்தது. அதன் பேரிரைச்சலில் காட்டு மரங்கள் கூட அதிர்ந்தன. மக்கள், “மாதாவே.. மடுமாதாவே”, எனக் கதற ஆரம்பித்தனர்.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24