Breaking News

யாழ்ப்பாணத்துத் தாயின் அவலத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் எடுத்துக் கூறிய சமந்தா?

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக பொறுப் புக்கூறலின் பூகோள சவால்கள் தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது. ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், இலங்கைக்கான தனது பயணம் குறித்தும் இலங்கையில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

பெருமளவில் காணாமற்போதல்களால் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளான இலங்கைக்கும், மெக்சிகோவுக்கும் தாம் அண்மைய மாதங்களில் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததாக சமந்தா பவர் குறிப்பிட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரை சந்தித்தபோது, 2009 மார்ச் மாதம் 16 வயதுடைய தனது மகள் இராணுவ சீருடையணிந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டது எவ்வாறு என்று விபரித்திருந்தார்.

அவர் தடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டார். அதற்குப் பின்னர் அவரது மகள் திரும்பி வரவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் ஒவ்வொரு நாளையும் அவர் தனது மகளைத் தேடுவதிலேயே செலவிட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு, அவர்களின் உறவுகள் காணாமற்போனது தொடர்பான சான்றிதழை வழங்க வழி செய்யும் சட்டத்தை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதாகவும் சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை, மெக்சிகோ போன்ற நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.