அமைச்சர்கள் முதலமைச்சர்களுடன் மைத்திரி இன்று சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின்போது நாட்டின் அரசியல் பொருளாதார வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. குறிப்பாக எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல்கள்
தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் விசேட உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி தொடர்பாகவும் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்படவுள்ளது. அந்தவகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களினதும் முதலமைச்சர்களினதும் யோசனைகளையும் கருத்துக்களையும் ஜனாதிபதி கோருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிகழ்வின் இறுதியில் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராசப்போசன விருந்தளிக்கவுள்ளார்.
அதன்படி அனைவரையும் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதன் காரணமாகவே வடக்கு முதல்வர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டார் என அறிய முடிகின்றது.








