சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது சாத்தியமற்றது!
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எந்தவித முன்னறிவித்தலும் இல்லை.
சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தாலும் ஆதரிப்பது தொடர்பில் கட்சிக்குள் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் தெரிவித்தன.
பாராளுமன்றத்தில் தனிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத நபர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் கட்சிகள் தெரிவித்தன.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக பொது எதிரணியினர் தெரிவித்துள்ள நிலையில் பிரேரணையை ஏனைய கட்சிகள் ஆதரிக்குமா என ஊடகம் ஒன்று வினவியபோதே பிரதான கட்சிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டன.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகள் விமர்சிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளமை உண்மையேயாகும்.
வடக்கில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி சம்பந்தன் சென்றார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடமாகாண சபையும் அண்மைக் காலமாக மோசமான வகையில் செயற்பட்டு வருகின்றது. இவற்றை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எனினும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எந்த காரணங்களும் எமக்குத் தெரியாது.பொது எதிரணியினர் கொண்டுவருவதாக அறிவித்தல் விடுக்கவில்லை.
ஒருசில ஊடகங்களில் அவ்வாறான கருத்துகள் வெளிவந்துள்ள போதும் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. அவ்வாறு இருக்கையில் எம்மால் எந்த தீர்மானத்தையும் தெரிவிக்க முடியாது.
எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின் அது தொடர்பில் கட்சி கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் என்றார்.மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கையில்,கடந்த காலத்தில் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
மஹிந்த ஆதரவு அணியினர் தான் அந்த பிரேரணைகளையும் கொண்டுவந்தனர். ஆனால் இறுதியில் அவை வெறும் விளம்பரமாக மட்டுமே காணப்பட்டன. அதேபோல் இப்போதும் எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவதென தெரிவிக்கின்றனர்.
இதுவும் எந்தளவுக்கு சாத்தியம் என்பது சந்தேகமேயாகும். எவ்வாறு இருப்பினும் எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் அதை ஆதரிப்பது தொடர்பில் கட்சி எந்தவித தீர்மானத்தையும் இதுவரையில் எடுக்கவில்லை.
அவ்வாறு எந்த தீர்மானங்களும் எடுப்பதாயின் கட்சியின் அரசியல் குழு தீர்மானம் எடுக்கும். எவ்வாறு இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மோசமானதாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவிக்கையில்,எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுக்கவில்லை. கட்சியில் அவ்வாறு எந்தத் தீர்மானமும் மேற்கொள்வதாக தெரிவிக்கவும் இல்லை.
பாராளுமன்றத்தில் கட்சியாக அங்கீகாரம் பெறாதவர்கள் அவ்வாறு நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டுவந்தாலும் அதை ஆதரிக்க முடியாது.வடமாகாண சபையின் செயற்பாடுகள் அவர்களின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு. இதுவரையில் எதிர்க்கட்சி தலைவர் நாட்டை பிரித்து தனி இராச்சியம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கவில்லை.
தவறான கருத்துகளை முன்வைத்து இனவாதத்தை பரப்பும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இருக்கையில் நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவது சாத்தியமற்றது என்றார்.