Breaking News

விக்கி, மஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டுமாம் – ரில்வின் சில்வா



மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்தவின் இனவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் விக்னேஸ்வரனின் இனவாதப்போக்கு அமைந்துள்ளது. வடக்கில் விக்கினேஸ்வரனின் இனவாதத்தையும் தெற்கில் மஹிந்தவின் இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும். இந்த இருவரது செயற்பாடுகளும் எந்த வகையிலும் நல்லிணக்கத்துக்கு சாதகமாக அமையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

வடக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை உடனடியாக வென்றுகொடுத்தும், இனப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டும் வடக்கில் வளரும் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டில் மிகவும் மோசமான வகையில் யுத்தம் ஒன்று இடம்பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எமது மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இனியொரு தடவை நாட்டில் யுத்தம் இடம்பெற்றாத வகையிலும் நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்காத வகையிலும் செயற்பட வேண்டும்.