Breaking News

போர் வரலாற்று நூல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்- மகிந்த அறிவுரை



சிறிலங்காவில் நடந்த போர் வரலாற்றைக் கூறும் நூல்கள், பாடசாலை பாடநூல்களில் இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய, ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்’ என்ற நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இந்த நிகழ்வு கடந்த 28ஆம் நாள் மாலை இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச,

‘ஜெனரல் ஜெரி டி சில்வாவினால் எழுதப்பட்ட ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்’ மற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ போன்ற போர்வரலாறு தொடர்பாக எழுதப்பட்டுள்ள நூல்கள், பாடசாலைப் பாடத்திட்டத்துக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

போர் வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்ற தருணத்தில், ஒரு காலத்தில் போரின் போது சிறிலங்கா படையினர் பட்ட துன்பங்கள், துயரங்கள், பாதிப்புகள் மற்றும் அவர்களின் பொறுப்புணர்வு என்பனவற்றை நினைவுபடுத்தும் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் ஈடுபடவுள்ளனர்.

அவர்கள் எமது படைவீரர்களை போர்க்குற்றவாளிகளாக அடையாளப்படுத்த முனைகின்றனர். அனைத்துலக நீதிபதிகளை விசாரணையில் ஈடுபடுத்தி எமது படையினரை இந்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தண்டிக்க முயற்சிக்கின்றனர்.

புலிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. போரில் இறந்த படையினரின் மனைவிமாருக்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.