Breaking News

மாணவர் படுகொலை! மே 17 இயக்கம் முற்றுகைப் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

அவ் இயக்கத்த்தின் செய்திக் குறிப்பு பின்வருமாறு…

யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாத காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது.

ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்கு பின்பான அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர் தினத்தில் விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29வது நினைவு நாள் இன்று… இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

சர்வதேசத்தின் தோல்வியும், அமெரிக்க தீர்மானத்தின் துரோகமும், இந்தியாவின் கைக்கூலித்தனமும், சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியும், சம்பந்தன் – சுமந்திரனின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சமரச அரசியலும் தமிழர்கள் மீது இப்படுகொலை நிகழ்த்த உதவி செய்திருக்கிறது.

சிங்களப் பேரினவாதம் கோரப்பற்களை காட்டியிருக்கிறது. சிங்கள பெளத்த பேரினவாத மிருகம் தன் ரத்த வெறிக்கு தமிழர்களை கோருகிறது. இனப்படுகொலைக்கான நீதி, தமிழீழம் பிறப்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது.

ஈழவிடுதலையில் தமிழக எழுச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. சிங்கள – இந்திய பேரினவாத கூட்டு காட்டாட்சியை எதிர்த்துப் போராட அணியமாவோம்.

தமிழகமே திரண்டெழு.

போராட வா தோழா… இழந்தது போதும்… பேரினவாதம் வீழ்த்த தோள்கொடு.. அன்றாட வாழ்க்கை சிக்கலே வாழ்வென்று முடங்கி விடாதே… செத்த மீன்களே ஆற்றோடு போகும்… எதிர்த்துப் போராடுவதே வாழ்வென்று ஆனது…. சோம்பித் திரியாதே… எதிர்த்து நிற்பவனே மனிதன்… போராட்டத்திற்கு அழைக்கிறோம்… மானமுள்ள தமிழினமாய் வீறு கொள்வோம்…. நண்பர்களோடு திரண்டு வா

இடம் : இலங்கை தூதரகம், நுங்கம்பாக்கம்
தேதி : 24-10-2016, திங்கள், நேரம்: காலை 10.00 மணி

மே பதினேழு இயக்கம்