அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கைது
அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் தூதுவராக இருந்த போது, 245,000 டொலர் தரகுப் பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா தூதரகத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இவர் இந்த தரகுப்பணத்தை பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவில் வைப்புச் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினராவார்.
நேற்று இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, வெளிநாடு செல்வதற்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தடை விதித்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.








