Breaking News

கொக்கட்டிச்சோலை படுகொலை; 30 ஆம் ஆண்டு நினைவுதினம் நாளை



மட்டக்களப்பு - படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம், கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி அருகில் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமை தாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்குள்ளானவர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட உறவினர்களுக்கான நாளை பிற்பகல் 2 மணிளயவில் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் சாந்திக்காக ஆலயங்களில் விஷேட பூஜைகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கொக்கட்டிச்சோலைப் பகுதியிலுள்ள நினைவு தூபி வளாகத்தை இளைஞர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிரமதானப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழத்தை உலுக்கிய முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கொக்கட்டிச்சோலை படுகொலைக்கு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

இந்த படுகொலையை முன்னிட்டு, மகிழடித்தீவு நினைவுதூபி அரங்கிலும், மகிழடித்தீவு கண்ணகையம்மன் ஆலய முன்றல் அரங்கிலும் நினைவு வணக்கத்தை மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக் கட்சிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.