Breaking News

ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்?

தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டதென தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார்.


முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், ஜனாதிபதிக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சிவகரன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

”கடந்த இருபது நாட்களிற்கு மேலாக தமது இருப்பியலுக்கான வாழ்வுரிமைப் போராட்டத்தை முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் மேற்கொண்டு வருவதை தாங்கள் அறியாமல் அல்ல.

ஜனநாயக ரீதியில் வாழ்வுரிமைக்கான அறவழிப் போராட்டத்தை ஒரு ஜனநாயக அரசு அங்கீகரிக்க வேண்டியதே அதன் தார்மீக பொறுப்பாகும். ஆனால் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்களுக்கு ஒரு நீதியும் தமிழ் மக்களுக்கு மற்றொரு நீதியுமே இலங்கையில் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் வலுகட்டாயமாக படைத்தரப்பை நிறுத்தியுள்ளீர்கள்.

தமிழ் மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்த படைத்தரப்பு எமது பூர்வீக நிலங்களை அபகரித்து சுகபோகம் அனுபவிக்க நாம் விரக்தியடைந்து வீதியில் நின்று போராடும் நிலையை ஏற்படுத்திவிட்டீர்கள்.

உங்கள் நல்லாட்சி எனும் குள்ளாட்சிக்கும் மகிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் முகத்தில் குத்தினார்கள். நீங்கள் எமது வாக்கால் அரியணை ஏறி எம்மை அடியோடு கருவறுக்க முனைகிறீர்கள்.

நீங்கள் தமிழ் அரசியல்வாதிகளை ஏமாற்றுவது போல் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஒரு போதும் இலக்கு மாறியவர்கள் அல்லர். சகல நிலைகளிலும் தமிழ் மக்களை விரக்தியடைய வைத்துவிட்டீர்கள். ஏகாதிபத்தியத்தால் இன நல்லுறவு மேம்படப் போவதில்லை.

எனவே காலம் தாமதித்து நீதியை நீர்த்துப்போக வைக்காமல் கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு போன்ற எமது பூர்வீக நிலங்களில் இருந்து படைத்தரப்பை வெளியேற்றி ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பளியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.