Breaking News

புலிகளுக்கு எதிராக போரிட்ட படையினரை பாதுகாப்பேன் – ஜனாதிபதி


மனித உரிமை மீறல் மற்றும் புலிகளுக்கு எதிரான
யுத்தத்தில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்கத் தயார் என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபடாத வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள், விளையாட்டுவீரர்கள் கொலையுடன் தொடர்புடைய படையினர் பாதுகாக்கத் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


தாய்நாட்டுக்காக போராடிய வீரமிகு படையினரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகுமென தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் வீரமிக்க படையினர் தொடர்பில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாம் பொறுப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்திராத சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இந்த யுகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் பயன் என்னவென சிலர் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தையும் வீரமிக்க படையினரையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் படையினர் தொடர்பில் எழும் சிக்கலான நிலமைகளின் போது நேரடியாக இலங்கையுடன் இருப்பதாக உலகின் பலமிக்க அரச தலைவர்கள் தம்மிடம் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போர் இடம்பெற்ற காலத்தில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய படை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் போர் வீரர்கள் தொடர்பில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தாம் பொறுப்புக் கூறுவதாக அனைவரிடமும் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்பற்ற விடயங்களில், அதாவது ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களின் கொலை, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் யாராவது ஒருவர் தவறிழைத்திருந்தால், அவர் எந்த தரத்திலிருந்தாலும் அவரை பாதுகாக்கும் இயலுமை தமக்கு இல்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்..