Breaking News

தனது தரப்பு வாதத்தை முன்வைக்கிறார் – விஜயகலா

சுவிஸ்குமாரை மக்கள் கொல்லா வாறு தடுத்து நிறுத்தியவுடன், வட மாகாண காவல்துறைமா அதிபருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து சுவிஸ்குமாரைப் பொறுப்பேற்குமாறு தெரிவித்தும், தமக்கு அவரைக் கைது செய்வதற்கு கட்டளை இடப்பட வில்லையெனத் தெரிவித்ததாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவரது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சுவிஸ்குமாரை அடித்துக்கொண்டிருந்தவர்களை மேலும் அடிக்கவிடாது, அவர்கள் அனைவரையும் சுவிஸ்குமாரைச் சுற்றி உட்கார வைத்ததாகவும், சுவிஸ்குமாரை காவல்துறையினர் வந்து பொறுப்பேற்பதற்காக சுமார் 35 நிமிடங்கள் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் வீதியில் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வடமாகாண பிரதிக் காவல்துறைமா அதிபருக்கு, தனது மெய்ப்பாதுகாவலர் மூலமாக தொலைபேசி அழைப்பெடுத்து சுவிஸ்குமாரை பொறுப்பேற்கும் படியும், இல்லாவிட்டால் மக்கள் அவரை அடித்துக் கொலை செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், சுவிஸ்குமாரைப் பொறுப்பெடுப்பதற்கு காவல்துறையினர் அங்கு வரவில்லை. அத்துடன் சுவிஸ்குமாரையும் அவர்கள் பொறுப்பெடுக்க வில்லை. சுமார் 35 நிமிடங்களாக காவல்துறையினரை வந்து பொறுப்பெடுக்குமாறு தெரிவித்தபோதிலும் காவல்துறையினரிடமிருந்து… சுவிஸ்குமாரைக் கைது செய்வதற்கு எம்மிடம் வாகனம் இல்லையெனவும்… சுவிஸ்குமாரைக் கைது செய்ய எம்மால் வரமுடியாது… சுவிஸ்குமாரைக் கைது செய்வதற்கு எம்மை அங்கு செல்லவேண்டாமென பிரதிக் காவல்துறைமா அதிபர் கட்டளையிட்டுள்ளார்… எம்மால் சுவிஸ்குமாரை பொறுப்பெடுக்க முடியாது.. என்ற வசனங்களே காவல்துறையினரிடமிருந்து வந்தது. இதன்பின்னர் சுவிஸ்குமாருக்கு அங்கிருந்த மக்களை அடிக்கக்கூடாது என எச்சரித்து அவர் அங்கிருந்து வேறு அலுவலாகச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.