Breaking News

இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள்!

டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட 20 வீரர்கள் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. 

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதை அடுத்து ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், துடுப்பாட்ட வீரர் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். 

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. 29 பேர் கொண்ட இந்த அணியில் யு-19 உலகக் கிண்ண போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதர் அலி தேர்வாகியுள்ளார். 

வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதியானது. இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்தது. இதனால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 10 வீரர்களும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.

இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 10 வீரர்களும் கொரோனா மறுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கஷிஃப் பட்டி, ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, இம்ரான் கான் ஆகிய நான்கு வீரர்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உறுதியாகியுள்ளது. 

முகமது ஹபீஸ், ஃபகார் ஸமான், சதாப் கான், முகமது ரிஸ்வான், முகமது ஹஸ்நைன் ஆகிய வீரர்களுக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளது. இதன்பிறகு அனைவருக்கும் மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த இரு பரிசோதனை முடிவுகளிலும் நெகடிவ் என உறுதியானால், அந்த வீரர்கள் உடனடியாக இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட 20 வீரர்கள் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. 

லாகூரிலிருந்து தனி விமானம் மூலமாக மான்செஸ்டருக்குச் சென்றுள்ளார்கள். இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

இதன்பிறகு ஜூலை 13 முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள்.