Breaking News

OBC Reservation: இந்தத் தீர்ப்பு நம் ஒருமித்த குரலின் வெற்றி - சீமான்

அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பிரதான கட்சிகள் வழக்குத் தொடுத்திருந்த நிலையில் , இந்த தீர்ப்பைப் பலரும் வரவேற்று வருகின்றனர்.

அந்த வகையில், தனது வரவேற்பைத் தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கான வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

சீமான் வெளியிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டதாவது “அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புச்செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட‌ தமிழக மக்களுக்குத் கிடைத்த வெற்றியாகும்!

சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.”

இட ஒதுக்கீடு தொடர்பாக தேசியத் தலைவர்களை இணைக்க தமிழகத்தின் எதிர்க்கட்சி முயற்சித்து வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு பலராலும் வரவேற்கப்படுகிறது.