Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு - மஹிந்த கருத்து

அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்பதெனிய, நாரம்மல திவிநெகும சந்தை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அப்போதைய தீவிரவாத யுகத்தில் நாட்டில் சுமார் 60 ஆயிரம் புத்திசாதுர்யம் மிக்க இளைஞர்களை நாடு இழக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்று நாட்டில் நிலவிய நிலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்வதற்கும், சாட்சி வழங்குவதற்கும் தான் உள்ளிட்ட குழுவினர் முன்வந்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டு தனி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சியை தோற்கடிக்க எமது அரசாங்கத்தால் முடிந்தது.

அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது.

பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு மாறாக இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து அவர்களது எதிர்காலத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.