Breaking News

2020 பொதுத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு - 60 % வாக்குப்பதிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமானது.

12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும் இம்முறை பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 69,000 பொலிஸார் மற்றும் 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர், கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறை மாவட்டத்தில் 10, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 05, நுவரெலியா மாவட்டத்தில் 08, காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்டத்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07, யாழ். மாவட்டத்தில் 07, வன்னி மாவட்டத்தில் 06, மட்டக்களப்பு மாவட்டத்தில் 05, திகாமடுல்ல மாவட்டத்தில் 07, திருகோணமலை மாவட்டத்தில் 04, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 08, அனுராதபுரம் மாவட்டத்தில் 09, பொலன்னறுவை மாவட்டத்தில் 05, பதுளை மாவட்டத்தில் 09, மொனராகலை மாவட்டத்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.