Breaking News

மினரல் வாட்டரை விட தண்ணியை சுத்தமாக வடிகட்டும் மூலிகைகள், எதிர்ப்பு சக்தியும் உண்டு!

குடிக்கும் நீர் சுத்தமானதாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். நீரை சுத்திகரித்து குடிக்கும் முறையிலும் பலவிதமான முறைகளை பின்பற்றுகிறோம். கேன் வாட்டர் முதல் ஆர். ஓ வாட்டர் வரை சுத்திகரித்து குடித்தாலும் நீரில் நச்சுகளோடு நீரின் சத்துகளும் சேர்ந்து வெளியேறிவிடுகிறது. 

நீரை சுத்திகரிப்பதிலும் இயற்கை வழிமுறைகள் உண்டு. முன்னோர்கள் காலம் முதலே நீர் சுத்திகரிப்பு முறையும் இயற்கை வழியில் இருந்தது. தற்போது பாரம்பரிய உணவை நோக்கி திரும்பியிருக்கும் நிலையில் குடி நீர் குறித்த விழிப்புணர்வும் உண்டாகியிருக்கிறது. பெருகிவரும் மண்பானைகளே இதற்கு சாட்சி என்று சொல்லலாம். மண் பானையை கொண்டு குடிநீரை சுத்திகரிக்கும் முறை குறித்து பார்க்கலாம். 

தேற்றான் கொட்டை 

நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய பொருள் இது. ஆய்வுகளிலும் நீரில் இருக்கும் வேதிப்பொருளை தேற்றான் கொட்டை உறிஞ்சி கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. 

குடிநீர் கலங்கலாக இருந்தாலும் அதை தெளிவுபடுத்தி சுத்தம் செய்து கொடுப்பதில் தேற்றான் கொட்டை சிறந்து விளங்குகிறது. தேற்றான் கொட்டையை பொடித்து ஒரு டீஸ்பூன் அளவு ஒரு பானை தண்ணீரில் சேர்த்து விட வேண்டும். பிறகு 5 மணி நேரம் கழித்து குடிக்கலாம். தண்ணீரை சுத்தம் செய்து தண்ணீரின் பிஹெச் அளவை அதிகரிக்க உதவுகிறது. 

நீரில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் கிருமிகளை நீக்கி நீரை சுத்தம் செய்து தருகிறது. தேற்றான் கொட்டையை மண் பானையின் உள்ளே நன்றாக உரசி விட்டு பிறகும் நீர் விட்டு குடிக்கலாம். இதுவும் சிறந்த முறையில் செயல்படும் வடிகட்டிதான். இம்முறையில் நீரை கொதிக்க வைத்து பானையில் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே எடுத்து சுத்திகரிக்கலாம். 

​மூலிகை தழைகள் 

பானையில் நீர் விட்டு அதில் மூலிகை தழைகளை சேர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். நமது அருகிலேயே இருக்ககூடிய பெரும்பாலான மூலிகைகளை நாம் மறந்துவிடுகிறோம். 

துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, புதினா இலைகளை கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து மொத்தமாக சேர்த்து நூலில் கட்டி பானையில் சேர்க்கவும். இவை பானை அடியில் தங்கி விடக்கூடும். இவை நீரில் இருக்கும் கிருமியை நீக்கி நீருக்கு சுவையும் தரக்கூடியது. 

கூடுதலாக இந்த நீரை குடித்து வந்தால், சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனையும் வராமல் தவிர்க்கலாம். வளரும் குழந்தைகள் முதல் இந்த நீரை குடித்து வந்தால் உடலில் எதிர்ப்புசக்தி குறையாமல் பாதுகாக்கலாம். குடிநீர் சுத்திகரிப்பதோடு உடலுக்கு நன்மை செய்யவும் மூலிகை தழைகள் உதவுகிறது. 

​மூலிகை பொருள் கலந்த நீர் 

மண் பானை முழுக்க நீர் நிரப்பிவிடவும். வெள்ளைத் துணியில் சிறிதளவு சீரகம், மிளகு, திப்பிலி, நன்னாரி, வெட்டிவேர் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி நீரில் போட்டுவிட வேண்டும். 8 முதல் 10 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். 

துணியில் முடிந்திருக்கும் மூலிகை பொருள்கள் நீரில் நனைந்து சத்துகள் இறங்கி விடும். இந்த சுத்திகரிப்பு போதுமானதாக இருக்கும். என்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். சீரக நீர், ஓம நீர் என்று குடித்து பெறும் ஆரோக்கியத்தை இந்த மூலிகை பொருள் கலந்த நீர் கொடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவை சுவையான மணமும் கொண்டிருக்கும் என்பதால் விரும்பி குடிக்கவும் செய்வார்கள். 

நன்னாரி சேர்ப்பதன் மூலம் உடல் உஷ்ணமில்லாமல் குளிர்ச்சியாக இருக்கும். சிறுநீர்க் கடுப்பு இல்லாமல் செய்யும். உடல் சோர்வையும் இல்லாமல் செய்யும். வெட்டிவேர் குளிர்ச்சியானது என்பதோடு ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. உடல் உறுப்புகளை சேதத்தில் இருந்து பாதுகாக்கும். 

​மண் சுத்திகரிப்பு நீர்  

மணலை கொண்டு நீரை சுத்தம் செய்யும் வழக்கம் சற்று மெனக்கெட்டு செய்ய வேண்டியதாக இருக்கும். அதோடு இந்த முறையில் நீரை வடிகட்டுவதும் சாதாரணமானதல்ல. ஆனால் நீரில் இருக்கும் நச்சை நீக்குவதோடு, நீருக்கு ருசி கொடுக்க கூடியது என்பதால் இதை பயன்படுத்திய பிறகு வேறு ஒன்றை நாட மாட்டீர்கள். 

இரண்டு பானையை கொண்டு இம்முறையில் நீர் வடிகட்டப்படுகிறது. ஒரு பானையில் பாதி அளவு மணலை நிரப்பி கொள்ள வேண்டும். ஆற்றுநீர் ஓடும் இடத்தில் இருந்து மணலை எடுத்து பயன்படுத்த வேண்டும். அடியில் துளி அளவு நீர் இறங்கும் வகையில் ஓட்டை போட வேண்டும். 

மற்றொரு பானையின் வாயை வெள்ளை துணி கொண்டு மூடிவிடவேண்டும். இதன் மீது மணல் நிரப்பிய பானையை வைத்து அது நிறையும் அளவு நீர் விட வேண்டும். நீர் மணலில் நுழைந்து சுத்திகரிக்கப்பட்டு துளி துளியாக பானையில் இறங்கும். மணல் கசடு இருந்தாலும் வெள்ளைத் துணியில் தங்கி கொள்ளும். 

மேற்கண்ட நான்கு முறையுமே இயற்கை முறையில் நீரை சுத்திகரிக்கும் முறை தான். நீரில் இருக்கும் சத்துகள் குறையாமல் சுத்திகரிக்கும் முறை இதுதான். ஏனெனில் செயற்கையாக சுத்திகரிக்கப்படும் நீரானது உடலில் ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கவும் செய்ய வாய்ப்புண்டு. இனி குடிநீர் சுத்திகரிப்பிலும் இயற்கைக்கு மாறுவதன் மூலம் ஆரோக்கியம் குறையாமல் வாழலாம். அதிலும் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய வழியில்..