Breaking News

சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும்!


சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும். 

உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

கொஸ்டரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட “கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 

இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பன்னாட்டு காணாமற்போனோர் நாள் நிகழ்வும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இந்த தினத்தை முன்கொண்டு செல்கின்றன. 

இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தகாலத்திலும், யுத்தத்துக்குப் பின்னரும் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற வெவ்வேறு கலவரங்களின் போதும் அதிக எண்ணிக்கையானவர்கள் காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போன தங்களின் உறவினர்களுக்கு என்னானது என்பது குறித்து அறிவிக்குமாறு வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், 

இன்றைய தினமும், வடக்கு கிழக்கில், கவனயீர்ப்பு போராட்டப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.